NATIONAL

ஏகேபிகே: 88% கடனை திருப்பிச் செலுத்தும் காலக்கெடுவை ஒத்தி வைத்துள்ளனர்

புத்ராஜெயா, ஜூலை 3:

நடமாடும் கட்டுப்பாடு ஆணை (பிகேபி) காலகட்டத்தில் அரசாங்கம் அறிவித்த கடன் திரும்ப செலுத்துவதற்கான ஒத்திவைப்பை பலர் ஏற்றுக் கொண்ட வேளையில், மேலும் பலர் வழக்கம்போல தங்களின் மாதந்திர தவணைத் தொகையைச் செலுத்தி வந்தனர். மக்கள் மத்தியில், அவரவரின் தேவைக்கு ஏற்பவே, இந்த கடன் திரும்ப செலுத்துவதற்கான ஒத்திவைப்பை ஏற்றுக் கொள்வதா இல்லையா என்ற முடிவு அமைந்தது.

இதற்கிடையில், நிதி நிர்வாக ஆலோசனை நிறுவனம் (ஏகேபிகே), இது குறித்து இணையம் வழி ஆய்வு ஒன்றை நடத்தி இருக்கிறது. 1,873 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில் 1,648 அதாவது 88 விழுக்காட்டினர் பேங்க் நெகாரா அறிமுகப்படுத்திய கடன் திரும்ப செலுத்துவதற்கான ஒத்திவைப்பை தேர்வு செய்திருப்பது தெரிய வந்திருக்கிறது.

அதில், கடன் திரும்ப செலுத்துவதற்கான ஒத்திவைப்பை தேர்வு செய்த 788 பேரிடம் மேற்கொண்ட கண்ணோட்டத்தில், 48 விழுக்காட்டினர் அதாவது 378 பேர் இப்பணத்தை அவசரத்திற்கு பயன்படுத்த சேமித்து வைத்திருப்பது தெரிய வந்திருப்பதாக ஏ.கே.பி.கே. பொருளாதார கல்வி பிரிவு நிர்வாகி, நிர்மலா சுப்ரமணியம் தெரிவித்தார்.

மேலும், 21 விழுக்காட்டினர் (165 பேர்) தினசரி தேவைகளுக்காகவும், 16 விழுக்காட்டினர் (126 பேர்) முதலீட்டிற்காகவும், 11 விழுக்காட்டினர் (87 பேர்) குறைந்த அளவிலான கடனுக்கு விண்ணப்பிக்கவும், நான்கு விழுக்காட்டினர் (32 பேர்) எந்தவொரு நோக்கமும் இன்றி இந்த கடன் திரும்ப செலுத்துவதற்கான ஒத்திவைப்பை தேர்வு செய்திருக்கின்றனர்.

பிகேபி. மற்றும் கொவிட்-19 சம்பவங்கள் எதிர்பாராமல் நிகழ்ந்த ஒன்று என்றும் அவசர தேவைக்காக மக்கள் எந்தவொரு சேமிப்பையும் கொண்டிருக்காததே இதற்கு காரணம் என்றும் நிர்மலா குறிப்பிட்டார்.

— பெர்னாமா


Pengarang :