ஷா ஆலம், ஜூலை 14:
குறைந்தபட்ச சம்பளத்தை அடிக்கடி மறுபரிசீலனை செய்ய வேண்டும் என மாநில அரசாங்கம் கேட்டுக் கொள்வதாக சிலாங்கூர் மாநில சமூக மற்றும் பொருளாதார நிலைகளை மேம்பாட்டு ஆட்சிக்குழு உறுப்பினர் கணபதி ராவ் தெரிவித்தார். இதன் மூலம் வறுமை நிலையை நிவர்த்தி செய்ய முடியும் என்று அவர் விவரித்தார். இந்த புதிய சம்பள அளவுகோல் மக்களின் உண்மையான நிலையைக் காட்டுகிறது என்றார் அவர்.
” சிலாங்கூர் மாநிலத்தில் பிஜிகே வேறுபட்டுள்ளது. மத்திய அரசாங்கம் நிர்ணயம் செய்துள்ளதை காட்டிலும் அதிகமாக இருக்கிறது. சிலாங்கூரில் குறைந்தபட்ச சம்பளம் ரிம 1,500 ஆகும்,” என்று சிலாங்கூர் இன்றுக்கு தெரிவித்தார்.
புள்ளிவிவரத்துறை வெளியிட்டுள்ள வறுமைக்கோட்டிற்கு கீழ் வருமானம் (பிஜிகே) ரிம 980-இல் இருந்து ரிம 2,208-ஆக உயர்த்தப்பட்டதை வரவேற்பதாக கணபதி ராவ் கூறினார். கடந்த 2005-இல் இருந்து மலேசியாவில் வறுமைக்கோட்டின் நிலையை, வெள்ளிக்கிழமையன்று மத்திய அரசாங்கம் மாற்றியது. இதன் மூலம் வறுமைக்கோட்டின் கீழ் உள்ள குடும்பங்களின் எண்ணிக்கை 16,653-இல் இருந்து 405,441 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.