ஷா ஆலம், ஜூலை 13:
கட்டுமானத் தொழில்துறையை மேம்படுத்த சிலாங்கூர் மாநில அரசாங்கம், கோவிட்-19-க்கு பின் கட்டுப்படியான வீடுகள் (சிலாங்கூர்கூ ஹாராப்பான் வீடுகள்) கட்டும் ஊக்குவிப்பு திட்டத்தை தொடங்கவிருப்பதாக சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி இன்று சட்டமன்றக் கூட்டத்தில் தெரிவித்தார். ரிம 7.5 பில்லியன் மதிப்பிலான வீடமைப்பு திட்டங்கள் 30,000 புதிய கட்டுப்படியான வீடுகளை கட்டும் இலக்கை கொண்டிருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார். இதன் மூலம் கட்டுமானத் தொழில்துறை ஒரு புதிய பொருளாதாரக் பொழிவைப் பெறும் என்று அமிருடின் ஷாரி கூறினார்.
” மேம்பாட்டாளர்கள் சிலாங்கூர்கூ வீடமைப்பு திட்டங்களின் தேவைகளை மாற்றங்கள் செய்து 1,000 சதுர அடிக்கு உட்பட்ட வீடுகளை கட்டலாம். சிலாங்கூர்கூ ஹாராப்பான் வீடுகள் எனப்படும் இந்த வீடுகள் ரிம 250,000-க்கும் குறைவான விலையில் விற்கப்படும். இதில் அடிப்படை வசதிகள் அனைத்தும் இருக்கும்,” என்று அவர் சட்டமன்றத்தில் தாக்கல் செய்தார்.
தனது உரையில் அமிருடின் ஷாரி மூன்று அம்சங்களை உள்ளடக்கி பேசினார். உணவுப் பொருட்கள் விநியோகம், பொருளாதார வளர்ச்சி மற்றும் கோவிட்-19 தொற்று நோய் தடுப்பு நடவடிக்கைகளில் மேம்பாடு ஆகியவை ரிம 55.85 பில்லியன் மதிப்பிலான மந்திரி பெசாரின் பொருளாதார ஊக்குவிப்பு திட்டத்தில் அடங்கும். கடந்த நவம்பர் 15-இல் 277 கட்டுப்படியான வீடமைப்பு மேம்பாட்டுத் திட்டங்களை சிலாங்கூர் மாநிலத்தில் நிறைவேற்றப்பட்டது. இதில் மொத்தம் 121,695 வீடுகள் கட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.