கோலா லம்பூர், ஜூலை 25:
சிலிம் இடைத்தேர்தலில் லங்காவி நாடாளுமன்ற உறுப்பினர் துன் டாக்டர் மகாதீர் முகமட் தலைமையிலான பெர்சத்து குழுவுடன் இணைந்து பணியாற்ற பாக்காத்தான் ஹராப்பான் இன்னும் முடிவு செய்யவில்லை என்று மக்கள் நீதிக் கட்சியின் தலைவர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறியுள்ளார். தேசிய கூட்டணி (பிஎன்) வேட்பாளரை எதிர்த்து சிலிம் இடைத்தேர்தலில் ‘பெர்சத்து பிளாக்அவுட்’ போட்டியிடுவதாக செனட்டர் மர்சுகி யஹ்யா அறிவித்ததை அடுத்து அன்வார் இதனைக் கூறினார். சிலிம் இடைத்தேர்தலில் எதிர்க்கட்சி கூட்டணி போட்டியிடாது என்று பாக்காத்தான் ஹராப்பான் தலைவர்கள் மன்ற உறுப்பினர் ஒருவர் தன்னிடம் கூறியதாக மர்சுகி முன்பு கூறியிருந்தார்.
“அவர் அப்படி கூறியிருப்பது குழப்பம் அளிக்கிறது. நாங்கள் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவோம். அவர்களின் நிலைப்பாடு என்ன என்று அறிய வேண்டும். அதுவே எங்களின் நிலைப்பாடு. பின்னர் செவ்வாய்க்கிழமை அன்று இது குறித்து முடிவு செய்ய பாக்காத்தான் சந்திக்கும்” என்று அன்வார் இன்று செய்தியாளர்களிடம் கூறினார். மகாதீரின் குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்த பாக்காத்தான் ஒரு பிரதிநிதியை அனுப்பியதாகவும் அன்வார் கூறினார். முன்னதாக சினி இடைத்தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்று பாக்காத்தான் முடிவு செய்ததாகவும், ஆனால் இப்போது நிலைமை வேறுபட்டுள்ளது என்றும் அன்வார் கூறினார்.