ஷா ஆலம், ஜூலை 28:
முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜீப் ரசாக் மீதான வழக்கில் நீதிமன்றம் குற்றவாளி என தீர்ப்பு வழங்கியுள்ளது மக்களுக்கு கிடைத்த வெற்றி என்று பாக்காத்தான் ஹாராப்பான் தலைவர்கள் மன்றம் (பாக்காத்தான்) கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளது. மக்கள் நீதிக் கட்சியின் தலைவர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், அமானா கட்சியின் தலைவர் மாட் சாபு மற்றும் ஜனநாயக செயல்கட்சியின் பொதுச் செயலாளர் லிம் குவான் எங் ஆகியோர் கூட்டாக அந்த அறிக்கையில் கையொப்பம் இட்டுள்ளனர். முன்னாள் அட்டர்னி ஜெனரல் தோமி தோமஸ்-க்கு தங்களது நன்றிகளை மற்றும் பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்வதாக அவர்கள் கூறினர்.
” இந்த தீர்ப்பு மக்கள் பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணிக்கு 14-வது பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று சரித்திரம் படைத்தது மட்டுமின்றி தேசிய முன்னணியை தோல்வியை கொடுத்ததால் கிடைத்த மகத்தான வெற்றி ஆகும். சரித்திரத்தை புரட்டி பார்த்தால் 1 மலேசியா மேம்பாட்டு நிறுவனத்தின் (1எம்டிபி) நிர்வாகக் கோளாறுகளை முதல் முறையாக நாடாளுமன்றத்தில் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கிளப்பியுள்ளது தெரிய வரும்,” என்று அந்த கூட்டறிக்கையில் அவர்கள் தெரிவித்தனர்.