ஷா ஆலம், ஜூலை 10:
பிகெஎன்எஸ் ரியல் எஸ்டேட் நிறுவனத்திற்கு (பிஆர்இசி) சொந்தமான இரண்டு வணிக மையங்களின் வாடகை விலக்கு செப்டம்பர் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. நடமாடும் கட்டுப்பாடு ஆணை (பிகேபி) காலகட்டத்தில் பாதிக்கப்பட்டுள்ள வணிகர்களின் சுமையை குறைக்க இது துணை புரியும் என நிறுவனத்தில் இடைக்கால நிர்வாகி சைரில் முகமட் ரஷிட் கூறினார். மே மற்றும் ஜூன் மாதங்களில் வழங்கப்பட்ட வாடகை விலக்கு ஏறக்குறைய 500 பிகெஎன்எஸ் ஷா ஆலம் கொம்லெக்ஸ் மற்றும் எஸ்ஏசிசி மால் வணிகர்களுக்கு பேருதவியாக அமைந்துள்ளது. கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் 50% வாடகை கழிவு வழங்கப் பட்டது குறிப்பிடத்தக்கது.
” வாடகை விலக்கு அளித்ததில், பல வணிகர்கள் தங்களது நிதி நிர்வாகத்தை மறுசீரமைப்பு செய்ய வழிவகுத்தது. மேலும் சிலர் தங்களது நிறுவனங்களின் வணிக வியூகங்களை மாற்றி அமைக்க முடியும்,” என்று சிலாங்கூர் இன்றுக்கு சைரில் தெரிவித்தார்.