உலு லங்காட், ஜூலை 8:
சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள 6,000 பூர்வகுடி குடும்பத்தினருக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விநியோகம் பூர்த்தி அடைந்தது. நடமாடும் கட்டுப்பாடு ஆணை (பிகேபி) காலகட்டத்தில் பாதிக்கப்பட்ட பூர்வகுடிகளுக்கு உதவும் நோக்கில் இத்திட்டம் தொடங்கப்பட்டது என்று பூர்வகுடி மக்கள் நலன் ஆட்சிக்குழு உறுப்பினர் ஹீ லோய் சான் தெரிவித்தார். மாநிலத்தில் மொத்தம் 74 பூர்வகுடி கிராமங்களுக்கு ரிம 50 மதிப்பிலான அரிசி, கோதுமை, சீனி, பால் டின் மற்றும் சமையல் எண்ணெய் விநியோகம் செய்யப்பட்டதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
” பிகேபி காலகட்டத்தில் பாதிக்கப்பட்ட பூர்வகுடி மக்களுக்கு உதவும் நோக்கில் ரிம 300,000 ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆகவே, இதன் மூலம் இவர்களின் பொருளாதாரச் சுமையை குறைக்க முடியும் என தாம் எதிர்பார்க்கிறேன்,” என்று சமூக கிராம நிர்வாக மன்ற (எம்பிகெகெ) நாற்காலி மற்றும் மேசைகளை வழங்கும் நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களிடம் இவ்வாறு ஹீ லோய் சான் வலியுறுத்தினார்.
ஏறக்குறைய 22,992 பூர்வகுடி மக்கள் நேரிடையாக மாநில அரசாங்கத்தின் உதவிகளை பெற நில மற்றும் மாவட்ட அலுவலகங்களை தொடர்பு கொள்ளலாம். சட்ட மன்ற உறுப்பினர் அலுவலகம் அல்லது சட்ட மன்ற ஒருங்கிணைப்பாளர் அலுவலகம், பூர்வகுடி மக்கள் மேம்பாட்டு இலாகா மற்றும் சமூக நல இலாகா ஆகியவை இந்த நடவடிக்கைக்கு உதவலாம் என்று ஹீ லோய் சான் கேட்டுக் கொண்டார்.