ஷா ஆலம், ஜூலை 14:
சிலாங்கூர் மாநிலத்திலுள்ள உள்ள அனைத்து விளையாட்டு மைதானங்கள் மற்றும் பொழுதுபோக்கு பூங்காக்களில் புகைபிடித்தல், ‘வாப்பிங்’ மற்றும் மதுபானம் அருந்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2005-ஆம் ஆண்டு மாநில ஊராட்சி மன்றங்கள் பூங்கா பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் திருத்தங்களுக்கு மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளதைத் தொடர்ந்து, இந்த தடை நடைமுறை அமலுக்கு வருவதாக மாநில ஊராட்சி, பொது போக்குவரத்து மற்றும் புத்தாக்க கிராம மேம்பாட்டுக் குழுத் தலைவர் இங் ஸி ஹான் தெரிவித்தார்.
இத்திட்டத்தை அறிமுகப்படுத்துவதன் மூலம் விளையாட்டு மைதானங்கள் மற்றும் பொழுதுபோக்கு பூங்காக்களில் குடிப்பழக்கம், புகைபிடித்தல் மற்றும் ‘வாப்பிங்’ ஆகியவற்றை தடைசெய்த முதல் மாநிலமாக சிலாங்கூர் மாநிலம் கருதப்படுவதாகவும் அவர் கூறினார். இப்பூங்காக்களை கண்காணிக்க சிலாங்கூரில் உள்ள ஊராட்சி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாநில அரசின் உத்தரவை மீறும் நபர்களுக்கு 1,000 ரிங்கிட் அபராதம் விதிக்கப்படலாம் என்றும் அவர் குறிப்பிட்டார். பார்வையாளர்கள், குறிப்பாக சிறுவர்கள் மற்றும் மூத்த குடிமக்கள் ஆகியோர் விளையாட்டு மைதானங்களுக்கும் பொழுதுபோக்கு பூங்காக்களுக்கும் செல்லும் போது அவர்களின் ஆரோக்கியத்தை நிலை நிறுத்துவதற்காக அரசாங்கம் இந்த நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாகவும் இங் விவரித்தார்.