ஷா ஆலம், ஜூலை 13:
காலியாக இருக்கும் மாநிலத்தின் இரண்டு ஆட்சிக்குழு உறுப்பினர்களை நிரப்ப பெயர்களை சிலாங்கூர் மாநில மன்னர் சுல்தான் ஷாராஃபூடின் இட்ரீஸ் ஷா அல்ஹாஜ் அவர்களிடம் வழங்கியதாக சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார். தற்போது மாநில அரசாங்கம் மாநில சுல்தானின் அங்கீகாரம் பெற காத்திருப்பதாக அவர் மேலும் கூறினார். அரண்மனையில் இருந்து அனுமதி கிடைத்தவுடன் பதவி பிரமாணம் எடுக்கும் நாள் குறிக்கப்படும் என அமிருடின் விவரித்தார்.
“சிலாங்கூர் சுல்தான் அரண்மனையில் இருந்து அனுமதி வந்ததும், பதவி பிரமாணம் எடுக்கும் நாள் தெரிவிக்கப்படும். இதில் பல்வேறு சம்பிரதாயங்கள் உள்ளது. அனைத்தும் நாம் பின்பற்றி நடக்க வேண்டும். ஆகவே, அனுமதி வரும் வரையில் நாம் காத்திருக்க வேண்டும்,” என சட்டமன்ற கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய போது இவ்வாறு அமிருடின் ஷாரி பேசினார்.
கடந்த மார்ச் 5-இல் பெர்சத்து கட்சியின் ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ அப்துல் ரஷிட் அசாரி பதவியில் இருந்து நீக்குவதாக மந்திரி பெசார் அறிவித்தார். கடந்த வாரம் மாநில வீடமைப்பு மற்றும் நகர் நல்வாழ்வு ஆட்சிக்குழு உறுப்பினர் ஹானிஸா தல்ஹா பிகேஆர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதால் பதவியை விட்டு நீக்கப்பட்டது அனைவரும் அறிந்ததே.