கோலா லங்காட், ஜூலை 25:
எதிர் வரும் 15-வது பொதுத் தேர்தலில் அம்பாங் மற்றும் கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதிகளை மக்கள் நீதிக் கட்சி (பிகேஆர்) கைப்பற்ற அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும் என சிலாங்கூர் மாநில பிகேஆர் கட்சியின் தலைவர் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி சூளுரைத்தார். அது மட்டுமல்லாமல் தேசிய முன்னணியின் கோட்டைகளான சபாக் பெர்னாம் மற்றும் தஞ்சோங் காராங் ஆகிய தொகுதிகளையும் கைப்பற்ற போராடும் என அவர் மேலும் தெரிவித்தார்.
” சிலாங்கூர் மாநிலத்தை பிகேஆர் மற்றும் பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணியின் கோட்டை என்று நிரூபித்துக் காட்ட வேண்டும். கொள்கை மற்றும் தன்னம்பிக்கை மற்றும் பற்றாது, அதையும் விட சரியான வியூகம் அமைத்து செயல் பட வேண்டும். பலத்தை அதிகரிப்போம், சண்டை சச்சரவுகளை மறப்போம். இதுவே சிலாங்கூர் மாநில பிகேஆர் கட்சி ஒரு குழுவாக செயல்பட வேண்டிய தருணம்,” என்று சிலாங்கூர் மாநில மக்கள் நீதிக் கட்சியின் இளைஞர் அணியினரின் தேர்தல் இயந்திரத்தை அதிகாரப் பூர்வமாக தொடக்கி வைத்து உரையாற்றும் போது இவ்வாறு அவர் கூறினார்.