ஷா ஆலம், நவ 2- சிலாங்கூர் கூ திட்டத்தில் கூடுதலாக 30,000 ஆயிரம் வீடுகள் கட்டப்படும் என 2021 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில் வெளியிட்ட அறிவிப்பு மீது வீடமைப்பு மற்றும் நகர்ப்புற நல்வாழ்வுத் துறைக்கான ஆட்சிக் குழு ஆய்வு மேற்கொள்ளும். வீடுகளை கட்டுவதில் மட்டுமே கவனத்தை செலுத்த கூடாது. சமுதாயத்தின் பயனை கருத்தில் கொண்டு அமைதியும் சுபிட்சமும் நிறைந்த இருப்பிடத்தை உருவாக்குவது முக்கிய இலக்காக இருக்க வேண்டும் என்று ஆட்சிக்குழு உறுப்பினர் ரோட்சியா இஸ்மாயில் கூறினார். இந்த வீடமைப்பு திட்டத்தின் அமலாக்கத்தை நாம் தீர ஆராயவிருக்கிறோம். குடியிருப்பு என்பது வெறும் வீட்டை மட்டும் உள்ளடக்கவில்லை. சுற்றுச்சூழலையும் உள்ளடக்கி யுள்ளது என்றார் அவர். சித்தம் அமைப்பின் 26 தொழில் முனைவோரின் பங்கேற்புடன் அம்பாங், கேலக்சி பேரங்காடியில் நடைபெறும் தீபாவளி சந்தையை பார்வையிட்ட பின்னர் செய்தியா ளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார். கட்டுபடி விலையிலான வீடுகளின் நிர்மாணிப்பு தொடர்பான அறிவிப்பை சிலாங்கூர் மாநில அரசு மூன்றாம் கட்ட பொருளாதார மீட்சி திட்டத்தை தாக்கல் செய்த போது வெளியிட்டிருந்தது. அடுத்த மூன்று ஆண்டுகளில் 60,000 சிலாங்கூர் கூ வீடுகள் அதாவது ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டதை விட 30,000 வீடுகள் கூடுதலாக நிர்மாணிக்கப்படும் என்றும் அவை சிலாங்கூர் கூ ஹராப்பான் மற்றும் சிலாங்கூர் கூ இடாமான் அடிப்படையில் நிர்மாணிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. கடந்த 2018 வரை 14,497 சிலாங்கூர் கூ வீடுகள் கட்டி முடிக்கப்பட்ட வேளையில் இவ்வாண்டு ஜனவரி முதல் ஜூலை வரையிலான காலகட்டத்தில் மேலும் 4,750 வீடுகள் பூர்த்தியடைந்தன.