ஷா ஆலம், டிச 3- இவ்வாண்டு நடைபெற வேண்டிய ஆசிய இளையோர் கிண்ண ஹாக்கி போட்டி அடுத்தாண்டு ஜூலை மாத த்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இப்போட்டி வங்காளதேசத்தின் டாக்கா நகரிலுள்ள மௌலானா பஷானி அரங்கில் வரும் 2021 ஜூலை மாதம் முதல் தேதி தொடங்கி பத்தாம் தேவை வரை நடைபெறும்.
இப்போட்டி கோவிட்-19 நோய்த் தொற்று காரணமாக ஏற்கனவே இரு முறை ஒத்தி வைக்கப் பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ஆசிய ஹாக்கி சம்மேளனம் தனது அகப்பக்கம் வாயிலாக இந்த தகவலை வெளியிட்டது.
இந்த புதிய தேதிக்கு அனைத்துலக ஹாக்கி சம்மேளனம் ஒப்புதல் வழங்கியுள்ளதாகவும் அது கூறியது. 1999ஆம் ஆண்டு ஜனவரி முதல் தேதி அல்லது அதற்கு பின்னர் பிறந்தவர்கள் இப்போட்டியில் பங்கேற்க முடியும் என அச்சம்மேளனம் தெரிவித்தது.
அடுத்தாண்டு இந்தியாவில் நடைபெறவிருக்கும் அனைத்துலக இளையோர் கிண்ண ஹாக்கிப் போட்டிக்கான தேர்வு சுற்றாகவும் இந்த போட்டி விளங்கும் என அது மேலும் குறிப்பிட்டது.
மலேசியா, சீனா, தைவான், இந்தியா, ஜப்பான், தென் கொரியா, ஓமான், உஸ்பெக்கிஸ்தான், பாகிஸ்தான், வங்காளதேசம் ஆகிய பத்து நாடுகள் இந்த போட்டியில் பங்கேற்கின்றன.
இப்போட்டியை இவ்வாண்டு ஜூன் மாதம் 4ஆம் தேதி நடத்துவதற்கு தொடக்கத்தில் திட்டமிடப்பட்டிருந்தது. எனினும் கோவிட்- 19 நோய்த் தொற்று காரணமாக அடுத்தாண்டு ஜனவரி 30ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
இருப்பினும், நோய்த் தொற்றின் தாக்கம் குறையாத நிலையில் அப்போட்டியை அடுத்தாண்டு ஜூலை மாதத்திற்கு மறுபடியும் ஒத்திவைக்க ஆசிய ஹாக்கி சம்மேளனம் முடிவெடுத்துள்ளது.