கோம்பாக், டிச 2- இம்மாவட்டத்தில் உள்ள கனரக வாகன பழுதுபார்ப்பு பட்டறைகளை ஒரே இடத்திற்கு மாற்றுவதற்கான நடவடிக்கையில் சிலாங்கூர் அரசு ஈடுபட்டு வருகிறது.
நீர் வளங்கள் மாசடைவதை தடுக்கும் நோக்கில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக ஊராட்சி மன்றங்களுக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இங் ஸி ஹான் கூறினார்.
பெரும்பாலான தொழிற்சாலைகள் ரவாங் ஆற்றின் அருகே உள்ளதால் நீர் மாசுபடும் பிரச்னைகள் அதிகம் ஏற்படுகின்றன. ஆகவே, அத்தகைய தொழிற்சாலைகள் நீர் நிலைகளுக்கு வெகு தொலைவில் இருப்பதை உறுதி செய்வதே முக்கிய பணியாகும் என்றார் அவர்.
இன்று உடைக்கப்பட்ட சட்டவிரோத தொழிற்சாலை ஆற்றிலிருந்து 20 மீட்டர் தொலைவில் இருந்ததையும் அவர் சுட்டிக்காட்டினார்.
தாமான் காரிங் அருகே உள்ள சட்டவிரோத தொழிற்சாலையை உடைக்கும் பணியை பார்வையிட்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
கடந்த மாதம் 24ஆம் தேதி சுங்கை ரவாங்கிலிருந்து வெறும் ஒரு மீட்டர் தொலைவில் அமைந்திருந்த கனரக வாகன பழுதுபார்ப்பு பட்டறையை அதிகாரிகள் உடைத்தனர்.