ஷா ஆலம், டிச 1- “ரைட்” எனப்படும் ரோடா டாருள் ஏசான் திட்டத்தை மோட்டார் சைக்கிள் தவிர இதர வகை வாகனங்களுக்கும் விரிவுபடுத்த சிலாங்கூர் அரசு திட்டமிட்டுள்ளது.
வருமானத்தை பெருக்கிக் கொள்வதற்குரிய வாய்ப்பினை வழங்கும் தற்காலிக பொருளாதார நடவடிக்கைகளில் இளைஞர்கள் ஈடுபடுவதை ஊக்குவிக்கும் வகையில் இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக இளம் தலைமுறையினர் மேம்பாட்டுத் துறைக்கான ஆட்சிக் குழு உறுப்பினர் முகமது கைருடின் ஓத்மான் கூறினார்.
நாம் மேற்கொள்ளும் ஒரு எந்த திட்டமும் இளைஞர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில்தான் அமையும். எதிர்காலத்தில் கார்களுக்கான மின் அழைப்பு முறை வேண்டும் என கோரிக்கை எழும் பட்சத்தில் அதனை பரிசீலனை செய்ய அரசு தயாராக உள்ளது என்றார் அவர்.
மீடியா சிலாங்கூர் முகநூல் வாயிலாக நடத்தப்பட்ட வேலை வாய்ப்பு தொடர்பான விவாதத்தில் கலந்து கொண்ட போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
கோவிட்-19 சம்பவங்களுக்கு பிந்தைய பொருளாதார சிக்கல்களில் இருந்து இளைஞர்கள் மீள்வதற்கு ஏதுவாக மாநில அரசு புதிய அணுகுமுறைகளை கண்டறியும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக அவர் மேலும் சொன்னார்.
சிலாங்கூரில் உள்ள 62 லட்சம் மக்கள் தொகையில் 29 லட்சம் பேர் 15 முதல் 40 வயதுக்குட்பட்டவர்களாக உள்ளனர். இளைஞர்களின் ஆதிக்கம் அதிகம் உள்ள மாநிலமாக சிலாங்கூர் விளங்குவதை இது காட்டுகிறது என்றார் அவர்.
ரைட் திட்டத்தை புறநகர் பகுதிகளுக்கும் விரிவுபடுத்தும் வகையில் 2021 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில் 20 லட்சம் வெள்ளி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இத்திட்டத்தின் கீழ் இளைஞர்கள் பி2 லைசன்ஸ் பெறுவதற்கு 350 வெள்ளியும் மின் அழைப்பு தொடர்பான பயிற்சி பெற 200 வெள்ளியும் பெர்கேசோ எனப்படும் சமூக பாதுகாப்பு நிறுவனத்தில் சந்தா செலுத்த 20 வெள்ளியும் உதவி நிதியாக வழங்கப்படும்.