கோலாலம்பூர், ஜன 14– அவசரகால நிலையை ரத்து செய்யவும் நாடாளுமன்றத்தை கூடிய விரைவில் கூட்டுவதற்கு உத்தரவிடவும் கோரி மாட்சிமை தங்கிய பேர ரசருக்கு மடல் அனுப்பும்படி அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களையும் தாம் கடிதம் வழி வலியுறுத்தியுள்ளதாக நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
அந்த முறையீட்டு மடலை கூடிய விரைவில் அனுப்பும்படி அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களிடமும் தாம் கோரிக்கை விடுத்துள்ளதாக அவர் சொன்னார்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனுப்பும் அந்த மடல் மாமன்னரின் மேலான பார்வைக்கு கொண்டுச் செல்லப்பட்டு அவசரகால நிலை ரத்து செய்யப்படவும் அவசரகாலம், கோவிட்-19 பெருந்தொற்று மற்றும் நாட்டின் பொருளாதார நெருக்கடி ஆகியவை குறித்து விவாதிப்பதற்கு ஏதுவாக வரும் ஜனவரி 31ஆம் தேதிக்குள் நாடாளுமன்றத்தைக் கூட்டவும் ஒப்புதல் கிடைக்கும் என தாம் எதிர்பார்ப்பதாக அன்வார் தெரிவித்தார்.