ஷா ஆலம், ஜன 5- உலு சிலாங்கூர், ஸூரா தொழில்பேட்டை பகுதியில் கடந்த மாதம் 31ஆம் தேதி மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை ஒன்றில் தாமிர உருக்கு தொழிற்சாலை மூடப்பட்டது.
உத்தரவை மீறி செயல்பட்ட காரணத்தால் அத்தொழிற்சாலைக்கு எதிராக சுற்றுச் சூழல் துறை மற்றும் காவல் துறையின் ஒத்துழைப்புடன் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக உலு சிலாங்கூர் மாவட்ட மன்றம் கூறியது.
கடந்த நவம்பர் மாதம் 27ஆம் தேதி வெளியிடப்பட்ட பணி நிறுத்த உத்தரவை மீறி செயல்பட்ட காரணத்தால் அந்த தொழிற்சாலை மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக மாவட்ட மன்றம் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் கூறப்பட்டது.
அந்த தொழிற்சாலையின் பூட்டுக்கள் உடைக்கப்பட்டிருந்த தோடு அமலாக்கத் துறையின் அனுமதியின்றி தாமிரத்தை உருக்கும் பணியும் மேற்கொள்ளப்பட்டது. அங்கு மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது இயந்திரங்கள் சூடாக இருந்ததோடு தாமிரத்தை உருக்கும் பணிக்குத் தேவையான கச்சாப் பொருள்களும் அங்கு காணப்பட்டன.
அந்த நிறுவனத்தின் தலைமை செயல்முறை அதிகாரி மற்றும் கட்டிடத்தின் பிரதிநிதியும் அழைக்கப்பட்டு விளக்கம் கோரப்பட்டதாக அந்த அறிக்கை தெரிவித்தது.
அந்த தொழிற்சாலை மீண்டும் செயல்படாதிருப்பதை உறுதி செய்வதற்காக அவ்வப்போது கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் என்பதோடு அத்தொழிற்சாலையின் நீர் மற்றும் மின்சார விநியோகத்தை துண்டிக்கும்படி ஆயர் சிலாங்கூர் மற்றும் டி.என்.பி நிறுவனங்கள் கேட்டுக் கொள்ளப்படும் என்று மாவட்ட மன்றம் கூறியது.