ஷா ஆலம், ஜன 20– சிலாங்கூர் மாநிலத்தின் அதிகார மற்றும் நிர்வாக அம்சங்களில் மாநில அரசின் அரசியல் நகர்வு ஆண்டுக்கு ஆண்டு முதிச்சியடைந்து வருவதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
மாநில அரசு கடந்த 2008ஆம் ஆண்டு முதல் பல்வேறு மாற்றங்களை மிகதீவிரமாக மேற்கொண்டு வருவதாகவும் அவர் சொன்னார்.
செல்கேட் எனப்படும் திறன், பொறுப்புணர்வு மற்றும வெளிப்படைபோக்கு செயல்குழுவின் உருவாக்கம் இதற்கு ஒரு சான்றாகும் என்று அவர் தெரிவித்தார்.
அரசாங்க ஆவணங்களை மக்கள் பார்வையிடுவதற்கு ஏதுவாக தகவல் சுதந்திர சட்டம் உருவாக்கப்பட்டது. எனினும், இது கூட்டரசு அரசாங்கத்தின் 1972ஆம் ஆண்டு அதிகாரத்துவ இரகசிய சட்டத்திற்கு உட்பட்டிருக்கிறது என்றார் அவர்.
நேற்று இயங்கலை வாயிலாக நடைபெற்ற இளம் தலைமுறையினரின் அரசியல் எனும் தலைப்பிலான ஆய்வரங்கில் அவர் இதனைத் தெரிவித்தார்.
மாநிலத்தில் நிலைத்தன்மையை தொடர்ந்து உறுதி செய்வதற்கு ஏதுவாக எதிர்க்கட்சிகளுக்கு ஜனநாயக வாய்ப்புகளை மேலும் அதிகளவில் மாநில அரசு வழங்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
எதிர்கட்சியினரும் தங்கள் தொகுதிகளில் சமூக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு ஏதுவாக எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மூன்று லட்சம் வெள்ளி நிதி ஒதுக்கீட்டை மாநில அரசு அங்கீகரித்துள்ளது எனவும் அவர் சொன்னார்.