ALAM SEKITAR & CUACAPENDIDIKANSELANGOR

நில அமிழ்வு சம்பவம்- யுனிசெல் பல்கலைக்கழகம் பாதுகாப்பாக உள்ளது

ஷா ஆலம், ஜன 19- கோல சிலாங்கூரில் ஈயலம்பம் ஒன்றின் அருகே நில அமிழ்வு ஏறபட்ட போதிலும் பெஸ்தாரி ஜெயாவிலுள்ள யுனிசெல் எனப்படும் சிலாங்கூர் பல்கலைக்கழக முதன்மை வளாகம் பாதுகாப்பாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நில அமிழ்வு ஏற்பட்ட இடம் பல்கலைக்கழக வளாகத்திலிருந்து ஒன்பது கிலோமீட்டர் தொலைவில் அதாவது 30 நிமிட பயண தொலைவில் உள்ளதாக அப்பல்கலைக்கழகத்தின் தொடர்பு மற்றும் வர்த்தக பிரிவு இயக்குநர் ஹஸ்ரி அபு ஹசான் கூறினார்.

நிலம் உள்வாங்கிய கம்போங் பெஸ்தாரி ஜெயா பகுதி பெஸ்தாரி ஜெயாவிலுள்ள யுனிசெல் வளாகத்திற்கு அருகே உள்ளதாக சில ஊடகங்கள் வெளியிட்ட செய்தி தொடர்பில் இந்த விளக்கம் தரப்படுவதாக அவர் சொன்னார்.

சம்பவ இடத்திற்கும் பல்கலைக்கழக வளாகத்திற்கும் இடையே உள்ள தொலைவு குறித்த குழப்பம் பொதுமக்கள் மத்தியில் ஏற்படுவதைத் தவிர்க்கும் நோக்கில் தெளிவான விளக்கத்தை தாங்கள் தர விரும்புவதாக அறிக்கை ஒன்றில் அவர் தெரிவித்தார்.

கோல சிலாங்கூர், உலு திங்கி பகுதியில் உள்ள ஈயலம்ப வளாகத்தில் கடந்த சனிக்கிழமை நில அமிழ்வு ஏற்பட்டது.

 


Pengarang :