ஷா ஆலம், ஜன 14- கோவிட்-19 பெருந்தொற்றின் தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்கு ஏதுவாக அரசாங்கம் நிர்ணயித்துள்ள சீரான நிர்வாக நடைமுறைகளை முறையாக பின்பற்றி நடக்கும்படி பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இரண்டாவது முறையாக நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமல்படுத்தப்பட்டது ஒரு சரியான நடவடிக்கையாகும் என்று முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில்துறை, சிறு, நடுத்தர தொழில்துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ தெங் சாங் கிம் கூறினார்.
இந்த நோய்த் தொற்றை முறியடிப்பதற்கு ஏதுவாக பொதுமக்களும் அரசாங்கத்துடன் இணைந்து செயல்பட வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளதால் நம்மை அந்நோய் தாக்காது என்ற அலட்சியப் போக்கு வேண்டாம். உங்கள் உயிரையும் உங்களை சார்ந்துள்ளவர்களின் உயிரையும் நேசியுங்கள். விதிமுறைகளை முறையாக பின்பற்றுங்கள் என்றார் அவர்.
கோவிட்-19 நிலைமை தற்போது கட்டுப்பாட்டில் உள்ளது எனத் தாம் நம்புவதாக கூறிய அவர், நோய்த் தடுப்பு விஷயத்தில் மத்திய அரசுடன் இணைந்து செயல்பட மாநில அரசு தயாராக உள்ளது என்றார்.