ஷா ஆலம், பிப் 25– கோவிட்-19 நோய்த் தொற்றைத் தடுப்பதற்கான இலவச பரிசோதனை இயக்கம் இன்று சபாக் பெர்ணம், சுங்கை பெசார் அரங்கில் நடைபெறவுள்ளது.
மாநில அரசினால் மேற்கொள்ளப்படும் இந்த இயக்கம் காலை மணி 8.00 முதல் மாலை மணி 5.00 வரை நடைபெறும். இம்மாவட்டத்திலுள்ளவர்கள் தங்கள் குடும்பத்துடன் வந்து இந்த பரிசோதனையை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
இந்த பரிசோதனை இயக்கம் சீராக நடைபெறுவதற்கு ஏதுவாக தங்கள் வருகையை http://screening.selangkah.my எனும் அகப்பக்கம் வாயிலாக முன்கூட்டியே பதிவு செய்து கொள்ளும்படி பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
கோவிட்-19 நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்தும் முயற்சியாக மாநிலம் முழுவதும் இலவச கோவிட்-19 பரிசோதனைகளை மேற்கொள்ள மாநில அரசு 60 லட்சம் வெள்ளியை ஒதுக்கீடு செய்வதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கடந்த மாதம் 20ஆம் தேதி அறிவித்திருந்தார்.
நோய்த் தொற்றை முன்கூட்டியே கண்டறியும் நோக்கிலான இத்திட்டத்தை அமல்படுத்தும் நாட்டின் முதல் மாநிலமாக சிலாங்கூர் விளங்குகிறது.
ஏற்கனவே, ஷா ஆலம், பண்டமாரான், பெட்டாலிங் ஜெயா ஆகிய இடங்களில் இந்த இலவச பரிசோதனை இயக்கம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.