கோலாலம்பூர், பிப் 25- பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புவதற்காக மாவட்ட அல்லது மாநில எல்லைகளை கடக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ள பெற்றோர்கள் காவல் துறையிடமிருந்து அனுமதி கடிதங்களைப் பெற வேண்டிய அவசியமில்லை.
இதற்கு பதிலாக பள்ளிகள் வழங்கிய சான்று கடிதங்களை அவர்கள் சாலை தடுப்புகளில் காட்டினால் போதுமானது என்று பாதுகாப்புக்கான முதன்மை அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கூறினார்.
உதாரணத்திற்கு பள்ளியின் தங்கும் விடுதிக்கு செல்வதாக இருந்தால், மாவட்ட அல்லது மாநில எல்லைகளைக் கடப்பதற்கான அனுமதிக் கடிதத்தை ஆசிரியர்கள் வழங்கலாம் என்றார் அவர்.
நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் ஆகக்கடைசி நிலவரங்கள் தொடர்பில் விளக்கமளிப்பதற்காக நடத்தப்பட்ட செய்தியாளர் கூட்டத்தில் அவர் இதனைத் தெரிவித்தார்.
அரச மலேசிய போலீஸ் படையின் உயர் அதிகாரிகளுடன் இவ்விவகாரம் குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறிய இஸ்மாயில் சப்ரி, இதன் தொடர்பில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து நாட்டிலுள்ள அனைத்து போலீசாருக்கும் தெரிவிக்கப்பட்டு விட்டதாகச் சொன்னார்.