ECONOMYPBTSELANGOR

புதிய இடத்திற்கு மாற்றம் காண்கிறது ஸ்ரீமூடா மார்க்கெட்

ஷா ஆலம், பிப் 26- சுமார் 25 ஆண்டுகாலப் போராட்டத்திற்குப் பின்னர் இங்குள்ள செக்சன் 25, தாமான் ஸ்ரீமூடா மார்க்கெட் இடமாற்றம் காண்கிறது.

முன்னால் ஶ்ரீ மூடா சட்டமன்ற உறுப்பினர்  மாட் சுகாய்மி சாப்பி,  மாநில அரசு, மற்றும் ஷா ஆலம் மாநகர் மன்றத்தின் அயரா முயற்சியில் தொடங்கப்பட்ட  கட்டுமான வேலைகள், இப்போதைய  சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு  கணபதி ராவ்  காலத்தில் அனைத்து வசதிகளுடன், நவீன மார்கெட்டாக  உருவெடுத்துள்ளது . இங்குள்ள நூற்றுக்கும் மேற்பட்ட வணிகர்கள் வரும் மார்ச் முதல் தேதிக்குள் மாற்றலாகின்றனர்.

இந்த மார்க்கெட் 90ஆம் ஆண்டுகளின் மத்தியில் தற்காலிக அடிப்படையில் 244 கடைகளுடன் ஆரம்பிக்கப்பட்டது. சவால்கள், எதிர்பார்ப்புகள், இழப்புகள், ஏற்றங்கள், ஏமாற்றங்களுடன் இந்த 25 ஆண்டுகளைக் கழித்து விட்ட இங்குள்ள வணிகர்கள் புதிய நம்பிக்கையுடன்  நவீன மார்க்கெட்டில் காலடி எடுத்து வைக்கவுள்ளனர்.

இந்த தற்காலிக மார்க்கெட் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் சுமார் நாற்பது விழுக்காட்டு இந்தியர்கள் இங்குள்ள வியாபாரத்தை ஆக்கிரமித்திருந்தனர். ஷா ஆலம் நகரில் அதிக இந்தியர்கள் வசிக்கும் பகுதியாக ஸ்ரீமூடா விளங்குவதால் ஷா ஆலமின் மையப்பகுதி, ஐக்கோம், ஆலம் மேகா, கோத்தா கெமுனிங் வட்டார இந்தியர்களுக்கு இதுவே பிரதான வர்த்தக மையமாக விளங்கியது.

இந்த தற்காலிக மார்க்கெட்டில் அடிப்படை வசதிகள் இல்லாத காரணத்தால் புதிய மார்க்கெட் அமைக்க கோரி வியாபாரிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

மார்க்கெட் பிரச்னைக்கு  விரைந்து தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகளில் மாநில அரசும் ஷா ஆலம் மாநகர் மன்றமும் தீவிரமாக ஈடுபட்டன. தற்காலிக மார்கெட்டுக்கு அருகில் புதிய மார்க்கெட்டை அமைக்கும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது.  2 ஏக்கர் நிலத்தில் ஆறு மாடி கட்டிடத்தை 2 கோடியே 20 லட்சம் வெள்ளி செலவில் நிர்மாணிக்கப்படும் என கடந்த 2014ஆம் ஆண்டில் மாநகர் மன்றம் அறிவித்தது.

புதிய மார்க்கெட்டை நிர்மாணிக்கும் பணிகள் தாமதமான வேளையில்  தூய்மையின்மை, அடிப்படை வசதிகள் இல்லாதது, அந்நிய பிரஜைகளின் ஆதிக்கம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் காரணமாக இந்த மார்க்கெட்டில்  வியாபாரிகளின் எண்ணிக்கையும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையும் அண்மைய காலமாக குறையத் தொடங்கியது.

புதிய மார்க்கெட் முழுமையடைந்து செயல்படத் தொடங்கி விட்ட நிலையில் புதிய சூழலில் தங்கள் வர்த்தகத்தை தொடங்குவதற்குரிய வாய்ப்பு இங்குள்ள வியாபாரிகளுக்கு கிட்டியுள்ளது. பல இந்திய வணிகர்களை சாதாரண நிலையிலிருந்து மிக உயரிய நிலைக்கு கொண்டுச் செல்வதில் இந்த மார்க்கெட் பெரும் பங்காற்றியதை மறுக்க முடியாது.  அந்த எதிர்பார்ப்பை புதிய மார்க்கெட் பூர்த்தி செய்யும் என்ற நம்பிக்கையும் ஏற்பட்டுள்ளது.

 


Pengarang :