ஷா ஆலம், பிப் 17- அனிஸ் எனப்படும் சிலாங்கூர் மாநில விஷேச பிள்ளைகள் சிறப்பு உதவித் திட்டத்திற்கு 485 விண்ணப்பங்களை சிலாங்கூர் மரபு வழி பிள்ளைகள் அறவாரியம் (யாவாஸ்) பெற்றுள்ளது. அனிஸ் திட்டம் கடந்த வெள்ளிக்கிழமை பொது மக்களுக்கு திறக்கப்பட்ட 24 மணி நேரத்தில் இந்த விண்ணப்பங்கள் பெறப்பட்டதாக யாவாஸ் துணை வர்த்தகப் பிரிவு நிர்வாகி ஷரிசான் முகமது ஷரீப் கூறினார். இவ்வாண்டில் இத்திட்டத்திற்கு அங்கீகரிக்கப்படும் விண்ணப்பங்களின் எண்ணிக்கை கடந்தாண்டை விட அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் சொன்னார். மாநில அரசின் ஒதுக்கீட்டின் அடிப்படையில் உதவி பெறுவோரின் எண்ணிக்கை தீர்மானிக்கப்படும். ஒரு மாற்றுத் திறனாளி பிள்ளைக்கான ஆண்டு ஒதுக்கீடு 5,000 வெள்ளியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றார் அவர். கடந்த 2019 ஆம் ஆண்டில் இத்திட்டம் தொடங்கப்பட்டது முதல் பல்வேறு இதுவரை 950,000 வெள்ளி வரை செலவிடப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். இத்திட்டத்தின் கீழ் உதவி பெறுவோரில் பலர் உணவுப் பிரச்சனையை எதிர்நோக்குவது கண்டறியப்பட்டுள்ளதால் உணவு உதவி உள்ளிட்ட அம்சங்கள் இம்முறை இத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் சொன்னார்.