ஷா ஆலம், மார்ச் 9- இல்லத்தரசிகளின் கைவண்ணத்தில் உருவான பொருள்களின் கண்காட்சியை சிலாங்கூர் மாநில அரசு ஏற்பாடு செய்துள்ளது. இந்த கண்காட்சி வரும் ஏப்ரல் மாதம் 24ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை இயங்கலை வாயிலாக நேரடியாகவும் நடைபெறும்.
இயங்கலை வாயிலாகவும் நேரடியாகவும் இந்த நடத்தப்படுவது இந்த கண்காட்சிக்கு கூடுதல் அம்சமாக விளங்குவதாக மகளிர் மற்றும் குடும்ப மேம்பாட்டுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் சித்தி மரியா மாமுட் கூறினார்.
ஆர்வமுள்ளவர்கள் இந்த கண்காட்சிக்கு தங்களுக்கு பொருத்தமான நேரத்தில் வர முடியும். அதே சமயம் இயங்கலை வாயிலாக ஒளிபரப்பாகும் இந்த கண்காட்சி தொடர்பான நிகழ்வுகளை தங்களுக்கு தேவையான நேரத்தில் காணொளி வாயிலாக மறுபடியும் பார்க்க முடியும் என்றார் அவர்.
இந்த கண்காட்சி இயங்கலை வாயிலாக முப்பரிமாண வடிவில் ஒளிபரப்பு செய்யப்படும். பார்வையாளர்களுக்கு புதிய அனுபவத்தையும் தாங்களும் அரங்கில் இருப்பது போன்ற உணர்வையும் ஏற்படுத்தும் என்று அவர் மேலும் சொன்னார்.
இந்த கண்காட்சி தொடர்பான முன்னோட்டத்தை மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி இங்குள்ள மாநில அரசு தலைமைச் செயலகத்தில் நேற்று தொடக்கி வைத்தார்.
சிறு மற்றும் நடுத்தரத் தொழில்துறையில் ஈடுபட்டுள்ள மகளிர் தங்கள் தயாரிப்பு பொருள்களை வர்த்தக ரீதியாக பிரபலப்படுத்துவதற்கு இந்த கண்காட்சி பெரிதும் துணை புரியும் என்றும் சித்தி மரியா கூறினார்.
.