ACTIVITIES AND ADSSELANGORYB ACTIVITIES

செம்பாக்கா அடுக்குமாடி குடியிருப்பு சீரமைப்புப் பணிகளுக்கு  600,000 வெள்ளி ஒதுக்கீடு

ஷா ஆலம், மார்ச் 7– பத்து கேவ்ஸ், செம்பாக்கா அடுக்குமாடி குடியிருப்பில் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள ஆறு லட்சம் வெள்ளியை சிலாங்கூர் மாநில வீடமைப்பு மற்றும் சொத்துடைமை வாரியம் ஒதுக்கீடு செய்துள்ளது.

அந்த அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள மின் தூக்கி மற்றும் கூரைகளை பழுதுபார்ப்பதற்கு இந்த  நிதி பயன்படுத்தப்படும் என்று செலாயாங் நகராண்மைக்கழக உறுப்பினர் அமிர் பாஸ்லி காலிட் கூறினார்.

மின் தூக்கியில் ஏற்பட்ட பழுது காரணமாக கடந்தாண்டு இறுதியிலிருந்து இந்த குடியிருப்பைச் சேர்ந்த சுமார் 2,000 குடியிருப்பாளர்கள் பெரும் சிரமத்தை எதிர்நோக்கி வந்ததாக அவர் தெரிவித்தார்.

மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கடந்த ஜனவரி மாதம் 26ஆம் தேதி இந்த குடியிருப்பு பகுதிக்கு வருகை புரிந்து நிலைமையை நேரில் கண்டறிந்தப் பின்னர் இந்த நிதி ஒதுக்கீட்டுக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டதாக அவர் சொன்னார்.

சுமார் பதினைந்து ஆண்டுகள் பழைமை வாய்ந்த இந்த அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள மின் தூக்கி அடிக்கடி  பழுதாகி  வந்ததாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

இரு  மின் தூக்கிகளை மாற்றுவது தவிர்த்து அந்த அடுக்குமாடி குடியிருப்பின் கூரைகளும் பழுதுபார்க்க வேண்டியுள்ளது. இப்பணிகள் யாவும் இன்னும் இரு வாரங்களில் ஆரம்பமாகும் என்றார் அவர்.


Pengarang :