ஷா ஆலம், மார்ச் 9– விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதற்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதைத் தொடர்ந்து சிலாங்கூர் மாநிலத்தை வலம் வரும் சைக்கிளோட்டப் போட்டியை வரும் மே மாதம் நடத்த சிலாங்கூர் அரசு திட்டமிட்டுள்ளது.
இந்த போட்டியை நடத்துவது தொடர்பான ஏற்பாடுகள் தற்போது விவாத நிலையில் உள்ளதாக இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் கைருடின் ஓத்மான் கூறினார்.
இந்த போட்டியை வரும் மே மாத தொடக்கத்தில் நடத்துவதற்கான சாத்தியங்கள் உள்ளதாக சிலாங்கூர் கினி பத்திரிகைக்கு அளித்து பேட்டியில் அவர் குறிப்பிட்டார்.
சைக்கிளோட்டப் போட்டி தவிர்த்து புட்சால் மற்றும் மராத்தோன் போட்டிகளையும் நடத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் சொன்னார்.
இதனிடையே, சுக்மா போட்டி குறித்து கருத்துரைத்த அவர், அப்போட்டியில் பங்கேற்கும் விளையாட்டாளர்களுக்கான பயிற்சிகள் விரைவில் தொடங்கும் என்றார்.
நிர்ணயிப்பட்ட விதிமுறைகளைப் பின்பற்றி பயிற்சிகள் நடத்தப்படுவதை உறுதி செய்வதற்காக மாநில விளையாட்டு மன்றத்துடன் தாங்கள் பேச்சு நடத்தி வருவதாக அவர் தெரிவித்தார்.