ஷா ஆலம், மார்ச் 9- சிலாங்கூர் மாநிலத்தில் குறிப்பாக கோடை காலத்தில் திறந்த வெளியில் தீயிடல் நடவடிக்கைகளில் ஈடுபடுவோருக்கு இனி கடுமையான தண்டனை விதிக்கப்படும்.
இத்தகைய குற்றங்களுக்கு கூடுதல் பட்சம் ஐந்து லட்சம் வெள்ளி அபராதம் அல்லது சிறைத் தண்டனை அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம் என்று மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுப்பதற்காக திறந்த வெளியில் தீயிடும் நடவடிக்கைகளுக்கு தடை விதிக்கப்பட்ட பகுதியாக சிலாங்கூர் மாநிலத்தை சுற்றுச்சூழல் துறை பிரகடனப்படுத்தியுள்ளது. ஆகவே, திறந்தவெளி தீயிடல் சம்பவங்கள் குறித்து தீயணைப்பு மற்றும் மீட்பு துறை அல்லது சுற்றுச்சூழல் துறைக்கு உடனடியாக தகவல் கொடுக்கும்படி மாநில மக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்றார் அவர்.
திறந்த வெளி தீயிடல் குறித்த தகவல்களை 999 என்ற எண்களில் தீயணைப்பு துறைக்கும் 1-800-88-2727 என்ற எண்களில் சுற்றுச்சூழல் துறைக்கும் தகவல் தெரிவிக்கலாம். இது தவிர, https://eaduan.Moe.gov.my எனும் அகப்பக்கம் வாயிலாகவும் புகார் தரலாம். 2001 ஆம் ஆண்டு(திருத்தத்தப்பட்ட) சுற்றுச்சூழல் சட்டத்தின் 29ஏஏ(2) ஆம் பிரிவின் கீழ் சிலாங்கூர் கடந்த 3 ஆம் தேதி முதல் திறந்தவெளி தீயிடல் நடவடிக்கைகளுக்கு தடை விதிக்கப்பட்ட மாநிலமாக அறிவிக்கப்பட்டது.