அம்பாங், மார்ச் 7– அம்பாங் வட்டாரத்தின் மேம்பாட்டையும் சமூக நடவடிக்கைகளையும் பார்வையிடுவதற்காக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் தன் துணைவியார் டத்தின்ஸ்ரீ மஸ்டியானா முகமதுவுடன் வந்தார்.
தொடக்க நிகழ்வாக மந்திரி புசார் தம்பதியர் கம்போங் டத்தோ முப்தி சுயிப் சந்தைப் பகுதிக்கு வருகை புரிந்ததோடு பொது மக்களையும் சந்தித்து அளவலாவினர்.
இச்சந்திப்பின் போது தாங்கள் எதிர்நோக்கும் பிரச்னைகளை வர்த்தகர்களும் பொதுமக்களும் மந்திரி புசாரிடம் எடுத்துரைத்தனர். உள்ளுர் மக்களின் பிரச்னைகள் மற்றும் தேவைகள் குறித்து அம்பாங் ஜெயா நகராண்மைக்கழகத்திடம் தாம் விவாதிக்கவுள்ளதாக மந்திரி புசார் சொன்னார்.
இந்த வருகையின் போது அவர் 500 முகக்கவரிகளையும் சிலாங்கூர் கினி பத்திரிகைகளையும் பொதுமக்களுக்கு விநியோகித்தார். மேலும் அவர் இங்குள்ள சில சூராவ் நிர்வாகத்தினரிடம் நிதியதவி வழங்கியதோடு குறைந்த வருமானம் பெறும் பி40 பிரிவினருக்கு உணவுக் கூடைகளையும் வழங்கினார்.
கடந்த ஜனவரி மாதம் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை பிறப்பிக்கப் பட்டது முதல் மாநிலம் முழுவதும் 63,000 உணவுக் கூடைகள் வசதி குறைந்தவர்களுக்கு விநியோகிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.