Ahli Dewan Negeri (ADN) Tanjung Sepat, Borhan Aman Shah
Press StatementsSELANGOR

18 வயதானவர்களின் வாக்குரிமையை மறுப்பது ஏற்புடையது அல்ல- தஞ்சோங் சிப்பாட் உறுப்பினர் கருத்து

கோல லங்காட், மார்ச் 30– பதினெட்டு வயது நிரம்பியவர்களுக்கு வழங்கப்பட்ட வாக்களிக்கும் உரிமையை ஒத்தி வைப்பது ஏற்புடைய செயல் அல்ல என்று தஞ்சோங் சிப்பாட் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் புர்ஹான் அமான் ஷா கூறினார்.

அவர்கள் பதின்ம வயதை அடைந்தவர்களாகவும் முதிர்ச்சி கொண்டவர்களாகவும் ஆகிவிட்டதால் அவர்களின் வாக்களிக்கும் உரிமையை பறிப்பது நியாயமற்ற செயலாகும் என அவர் சொன்னார்.

இணையம் வாயிலாக வாக்காளராக பதிவு செய்ய முடியாது என்றும் இதனை மேற்கொள்ள ஆய்வு தேவைப்படுவதாகவும் கூறப்படுவதை ஏற்க முடியாது என்றம் அவர் குறிப்பிட்டார்.

பழைய பாணியில் அல்லாமல் புதிய தொழில்நுட்பத்தின் வாயிலாக பணிகளை மேற்கொள்ள ஆரம்பித்து விட்டோம். ஆகவே, இதனை காரணம் காட்டி இயல்பாக வாக்காளராக பதியும் நடவடிக்கையை இனியும் தாமதப்படுத்தக்கூடாது என்று அவர் வலியுறுத்தினார்.

பதினெட்டு வயது நிரம்பியவர்கள் இவ்வாண்டு ஜூலை மாதம் முதல் வாக்களிக்கும் தகுதியைப் பெறுவர் என தேர்தல் ஆணையம் முன்பு அறிவித்திருந்தது. எனினும், இந்த நடைமுறை அடுத்தாண்டு  செப்டம்பர் மாதம் முதல் தேதிதான் அமல்படுத்தப்படும் என அந்த ஆணையம் தற்போது கூறியுள்ளது.

வாக்களிக்கும் வயது வரம்பைக் குறைப்பது, இயல்பாக வாக்காளராக பதிந்து கொள்வது, தேர்தல் போட்டியிடுவதற்கான வயது வரம்பை 18ஆக குறைப்பது ஆகிய அம்சங்கள் மீதான 2019ஆம் ஆண்டு அரசியலமைப்புச் சட்டத்திருத்த மசோதாவை மக்களவை கடந்த 2019ஆம் ஆண்டு ஜூலை 16ஆம் தேதி நிறைவேற்றியது.

இந்த  மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்ட பத்து நாட்களுக்குப் பின்னர் மேலவையில் மூன்றில் இரு மடங்கு பெரும்பான்மையில் அங்கீகரிக்கப்பட்டது.


Pengarang :