கோல நெருஸ், ஏப் 24- ஆள்பலத் தேவையை நிறைவு செய்வதற்கும் அதிக வருமானத்தை ஈட்டுவதற்கும் ஏதுவாக தோட்டத் தொழிலை தேர்ந்தெடுக்கும்படி உள்நாட்டினர் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
தோட்டத் தொழில் 3டி எனப்படும் அழுக்கு, கடினம் மற்றும் ஆபத்தானது என வகைப் படுத்தப் பட்டுள்ளதால் அத்தொழில் ஈடுபட உள்நாட்டினர் ஆர்வம் காட்டுவதில்லை என்று தோட்டத் துறை மற்றும் மூலத்தொழில் அமைச்சர் டத்தோ டாக்டர் முகமது கைருடின் அமான் ரசாலி கூறினார்.
தோட்டத் துறையில் வழங்கப்படும் சலுகைகளை யாரும் பார்ப்பதில்லை. வீடு, பள்ளி, வழிபாட்டுத் தலம் என அனைத்து வசதிகளும் தோட்டத் தொழிலாளர்களுக்கு ஏற்படுத்தித் தரப்படுகின்றன. இதற்காக உருவாக்கப்பட்ட சட்டங்களை அனைத்து முதலாளிகளும் பின்பற்ற வேண்டும் என்றார் அவர்.
கோல நெருஸ் தொகுதியில் வசதி குறைந்த 200 பேருக்கு உதவித் தொகையை வழங்கியப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
தோட்டத் துறையில் வேலை செய்ய விரும்வோர் அமைச்சு, தோட்ட நிறுவனங்கள் மற்றும் ஜோப்ஸ் மலேசியா அகப்பக்கத்தில் விபரங்களைப் பெறலாம் என்றார் அவர்.