ஷா ஆலம், ஏப் 5- கொசுவத்தி சுருள் புகையை தொடர்ந்து மூன்று இரவுகள் சுவாசிக்க நேர்ந்தால் ஆஸ்துமா மற்றும் மூச்சுத் திணறல் பிரச்னைக்கு ஆளாக நேரிடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்த புகையை சுவாசிக்கும் 7 முதல் 11 வயது வரையிலான சிறார்களுக்கு கபம் எனப்படும் நெஞ்சில் சளி பிடிக்கும் பிரச்னை உண்டாகும் அபாயம் உள்ளதாக மலேசிய புத்ரா பல்கலைக்கழகத்தின் கல்வியாளர் குழு மேற்கொண்ட ஆய்வு கூறுகிறது.
இந்த புகையை தொடர்ந்து சுவாசிக்கும் பட்சத்தில் நுரையீரல் செயல்பாடுகள் பாதிப்படையும் சாத்தியம் உள்ளதாக பேராசிரியர் டாக்டர் ஜூலியானா ஜலாலுடின் கூறினார்.
அந்த கொசு மருந்தை நீண்டகாலத்திற்கு பயன்படுத்துவதற்கும் மரபணுவில் ஏற்படும் பாதிப்புகளுக்கும் தொடர்புள்ளது சிலாங்கூர், உலு லங்காட் பகுதி மக்களிடையே மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
கொசுவத்தி சுருள் புகையை நீண்ட காலத்திற்கு சுவாசிப்பதால் ஆஸ்துமா, மூச்சுக் குழாய் அழற்சி, புற்றுநோய் போன்ற நோய்களின் தாக்கத்திற்கு ஆளாக நேரிடும் என்பதும் அந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளதாக அவர் மேலும் சொன்னார்.
அந்த கொசவத்தி சுருள் புகையினால் உண்டாகக்கூடிய காற்று மாசுபாட்டின் அளவு சுகாதார தர நிர்ணயம் மற்றும் காற்றுத் மாசுபாட்டு தரக் கட்டுபாட்டு அளவைக் காட்டிலும் அதிக அளவில் உள்ளதாகவும் அவர் கூறினார்.