சிப்பாங், ஏப் 15- சிப்பாங், பண்டார் பாரு சாலாக் திங்கி பகுதியில் கடந்த மார்ச் மாதம் 6ஆம் தேதி ஏற்பட்ட கடும் புயல் காரணமாக சேதமுற்ற 46 வீடுகளை பழுதுபார்க்க 470,000 வெள்ளி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அச் செலவுத் தொகையை எம்.பி.ஐ. எனப்படும் மந்திரி புசார் கழகத்தின் வாயிலாக சிலாங்கூர் மாநில அரசு ஏற்றுக் கொள்ளும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
பண்டார் பாரு சாலாக் திங்கியில் ஏற்பட்ட இயற்கை பேரிடரில் பாதிக்கப்பட்ட 46 வீடுகளை பழுதுபார்க்க 470,000 வெள்ளி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று முகநூல் வாயிலாக அவர் தெரிவித்தார்.
கடந்த மாதம் 6ஆம் தேதி பண்டார் பாரு சாலாக் திங்கி பகுதியை உலுக்கிய கடும் புயலுடன் கூடிய அடை மழையில் 100க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன.
இந்த புயலால் பாதிக்கப்பட்ட 120 குடும்பங்களுக்கு நிவாரண நிதியாக மாநில அரசு 500 வெள்ளியை முன்னதாக வழங்கியிருந்தது.