ஷா ஆலம், ஏப் 25- இயங்கலை வாயிலாக ஐந்து நாட்களுக்கு நடைபெறும் சிலாங்கூர் மகளிர் மாநாட்டில் 19 ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்படவுள்ளன.
சுகாதாரம், கல்வி, அரசியல் மற்றும் தலைமைத்துவம், பொருளாதார மேம்பாடு, தொழில் துறை, கலை உள்ளிட்ட தலைப்புகளில் அந்த கட்டுரைகள் படைக்கப்படும் என்று மகளிர் மேம்பாட்டிற்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் சித்தி மரியா மாமுட் கூறினார்.
ஒவ்வொரு துறையிலும் திறன் பெற்ற மதிப்பீட்டுக் குழுவினர் முன்னிலையில் கல்விமான்கள் இந்த கட்டுரைகளைப் படைப்பர் என்றும் அவர் தெரிவித்தார்.
இங்குள்ள மாநில அரசு தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இல்லத்தரசிகள் கைவண்ணத்தில் உருவான கைவினைப் பொருள் கண்காட்சியை தொடக்கி வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைக் கூறினார்.
இந்த நிகழ்வில் பாண்டான் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ டாக்டர் வான் அஜிசா இஸ்மாயிலும் கலந்து கொண்டார்.
மகளிர் சம்பந்தப்பட்ட மாநில அரசின் திட்டங்கள் விரிவான அளவில் அமலாக்கம் காண்பதற்கு ஏதுவாக இந்தமாநாட்டில் ஆக்ககரமான கருத்துகள் முன்வைக்கப்படும் எனத் தாம் நம்புவதாகவும் டாக்டர் சித்தி மரியா கூறினார்.