ஷா ஆலம்,ஏப் 23– இங்குள்ள செக்சன் 24இல் நிர்மாணிக்கப்பட்டு வரும் தபால் தலை அருங்காட்சியகம் வரும் 2023ஆம் ஆண்டு ஜனவரியில் பூர்த்தியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அந்த அருங்காட்சியகத்தின் கட்டுமானப் பணிகள் தற்போது 15 விழுக்காடு பூர்த்தியடைந்துள்ளதாக கலாசாரம் மற்றும் பாரம்பரியத் துறைக்கான மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் புர்ஹான் அமான் கூறினார்.
இந்த அருங்காட்சியகத்தின் கட்டுமானப் பணிகள் அடுத்தாண்டில் முற்றுப்பெற திட்டமிடப்பட்டிருந்தது. எனினும், அந்த கட்டுமானப் பகுதிக்கு நான் மேற்கொண்ட வருகையின் போது தொழிலாளர் பற்றாக்குறை காரணமாக பணிகள் பூர்த்தியடைவதில் தாமதம் ஏற்படும் என என்னிடம் தெரிவிக்கப்பட்டது என்றார் அவர்.
அந்த அருங்காட்சியகத்தின் நிர்மாணிப்பு பணிகள் சீராக நடைபெறுவதை உறுதி செய்ய தாம் இரு வாரங்களுக்கு ஒரு முறை கட்டுமானப் பகுதிக்கு வருகை மேற்கொள்ளவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
தபால் தலைகளில் இடம் பெற்றுள்ள மரங்களைக் கொண்டு அந்த அருங்காட்சியகத்தின் சுற்றுப்புறங்கள் அழகுபடுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், தபால்தலைகளை பட்டுவாடா செய்வதற்கு பயன்படுத்தப்பட்ட சைக்கிள், பழைய தபால் பெட்டிகள், அச்சு இயந்திரங்கள் உள்பட பல பொருள்கள் அந்த அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்படும் என்றார் அவர்.