ஷா ஆலம், ஏப் 13– சிலாங்கூரில் சுற்றுலாத் துறைக்கு புத்துயிரூட்டுவதற்காக சிலாங்கூரை வலம் வருவோம் எனும் உள்நாட்டு சுற்றுலாத் திட்ட தொகுப்பு தொடர்பில் மாநில சுற்றுலாத் துறை பயற்சி பட்டறையை நடத்தவுள்ளது.
இந்த பயிற்சித் திட்டம் நல்ல அறிமுகத்தையும் மித்தா எனப்படும் உள்நாடு சுற்றுலா சங்கத்தின் கீழ் பதிவு செய்துள்ள சுற்றுலா முகவர்களுக்கு சுற்றுலா இடங்கள் குறித்த தெளிவான புரிதலையும் ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தரமான மற்றும் கவர்ச்சிகரமான சுற்றுலா திட்டங்களை அறிமுகம் செய்வது மற்றும் சுற்றுலா சார்ந்த துறையினருடன் அணுக்கமான ஒத்துழைப்பை ஏற்படுததிக் கொள்வது ஆகிய நோக்கங்களின் அடிப்படையில் இந்த பயிற்சித் திட்டம் மேற்கொள்ளப்படுவதாக சுற்றுலாத் துறை வெளியிட்ட அறிக்கை ஒன்று கூறியது.
இரு பிரிவுகளாக நடத்தப்படும் இந்த ஒரு நாள் பயிற்சியில் 60 பங்கேற்பாளர்கள் கலந்து கொள்வர் என அது தெரிவித்தது.
சுற்றுலாத் துறை துடிப்புடன் செயல்படுவதற்கு ஏதுவாக மித்தா தவிர்த்து நிர்வாக மற்றும் ஊராட்சி மனற் நிலையிலும் ஒத்துழைப்பு நல்கப்படும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அங்கீகாரம் பெற்ற சுற்றுலா முகவர்களின் சேவையை நாடும்படி மாநிலத்தில் சுற்றுலா மேற்கொள்ள விரும்வோருக்கு சுற்றுலாத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் ஹீ லோய் சியான் கூறியிருந்தார்.