ஷா ஆலம், ஏப் 22– கோவிட்-19 தடுப்பூசி காரணமாக இதுவரை மரணம் ஏதும் நிகழவில்லை என்பதை சுகாதார அமைச்சு உறுதிப்படுத்தியது.
பொதுமக்கள் மத்தியில் அச்ச உணர்வு ஏற்படுவதை தவிர்க்க உறுதி செய்யப்படாத மற்றும் உண்மைக்கு மாறான தகவல்களை பகிரவோ வெளியிடவோ வேண்டாம் என்று அனைத்துத் தரப்பினரையும் அது கேட்டுக் கொண்டது.
உண்மை தகவல் அறிய பொதுமக்கள் சுகாதார அமைச்சின் அனைத்து சமூக ஊடகங்கள் மற்றும் அனைத்து மாநிலங்களிலும் உள்ள சி.பி.ஆர்.சி. எனப்படும் தேசிய நெருக்கடி தயார் நிலை மற்றும் துரித நடவடிக்கை மையத்தை நாடும்படியும் அவ்வமைச்சு வலியுறுத்தியது.
கோவிட்-19 தடுப்பூசி பற்றிய உண்மைத் தகவல்களை http://covid-19.moh.gov.my/ என்ற அகப்பக்கம் வாயிலாக அல்லது 03-88810200/ 03-88810600/ 03-88810700,” எண்களில் தேசிய மருந்தக ஒழுங்கு முறை பிரிவை தொடர்பு கொள்ளலாம் .
தடுப்பூசி பெற்ற சுகாதார அமைச்சின் பணியாளர்கள் சிலருக்கு மரணம் நேர்ந்ததாக சமூக ஊடகங்களில் வெளிவந்த தகவல்கள் மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அதன் முடிவுகள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அமைச்சின் அந்த அறிக்கை தெரிவித்தது.