கிள்ளான், ஏப் 15– நோன்பு இருந்த காரணத்திற்காக இரு மெய்க்காப்பாளர்கள் தாக்கப்பட்டச் சம்பவம் சம்பந்தப்பட்ட முதலாளியின் சட்டவிரோத வர்த்தக நடவடிக்கைள் அம்பலமாவதற்கு வழி வகுத்துள்ளது.
சம்பந்தப்பட்ட அந்த முதலாளி சட்டவிரோத சூதாட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதோடு ஆலோங் எனப்படும் வட்டி முதலையாகவும் செயல்பட்டதை போலீசார் கண்டு பிடித்துள்ளனர்.
நேற்று கைது செய்யப்பட்ட அந்த முதலாளியின் நான்கு ஊழியர்களிடமிருந்து பெறப்பட்ட தகவல்கள் மூலம் இந்த உண்மையை தாங்கள் கண்டறிந்ததாக சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ அர்ஜூனைடி முகமது கூறினார்.
அந்த நால்வரும் மேல் விசாரணைக்காக இன்று தொடங்கி ஐந்து முதல் ஏழு நாட்களுக்குத் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
கிள்ளான், புக்கிட் திங்கியில் உள்ள சந்தேகப்பேர்வழி ஒருவரின் வீட்டில் நேற்று இரவு 10.00 மணியவில் சோதனை மேற்கொண்ட போலீசார் அங்கிருந்து ஒரு துப்பாக்கி, 10 தோட்டாக்கள் மற்றும் அந்த மெய்க்கப்பாளர்களை தாக்குவதற்கு பயன்படுத்தப்பட்ட பிரம்பு ஆகியவற்றையும் கைப்பற்றியதாக அவர் தெரிவித்தார்.
பாதுகாப்பு நிறுவனத்திற்கு சொந்தமான அந்த துப்பாக்கி தாக்கப்பட்ட மெய்க்காப்பாளர்களில் ஒருவரின் வசம் இருந்தாகவும் அவர் சொன்னார்.
இதனைத் தொடர்ந்து அந்த வீட்டில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் 100 கிலோ தங்கக் கட்டிகள், 100 அமெரிக்க டாலர் மதிப்பு கொண்ட 12,500 நோட்டுகள் ஆகியவையும் கைப்பற்றப்பட்டன. கைப்பற்றப்பட்ட தங்கம் மற்றும் ரொக்கத்தின் மொத்த மதிப்பு 2 கோடியே85 லட்சத்து 50 ஆயிரம் வெள்ளியாகும் என்றார் அவர்.
44 வயதுடைய அந்த முதலாளி தலைநகர், டாங் வாங்கி போலீஸ் நிலையத்தில் நேற்று தடுத்து வைக்கப்பட்டதாக கூறிய அவர், சூதாட்டம் மற்றும் சட்டவிரோத வட்டித் தொழிலில் அவ்வாடவர் ஈடுபட்டு வந்தது தொடக்கக் கட்ட விசாணையில் தெரிய வந்துள்ளது என்றார்.
காயம் விளைவித்தது மற்றும் கொலை முயற்சி மற்றும் இஸ்லாத்தை அவமதித்தது தொடர்பில் குற்றவியல் சட்டத்தின் 324வது பிரிவு, 298வது பிரிவு மற்றும் 307வது பிரிவின் கீழ் இச்சம்பவம் மீது விசாரணை மேற்கொள்ளப்ட்டு வருதாகவும் அவர் சொன்னார்.
நோன்பு இருந்த காரணத்திற்காக முதலாளி தங்களை பிரம்பால் கடுமையாக தாக்கியதாக அவரது இரு மெய்க்காப்பாளர்கள் நேற்று போலீசில் புகார் செய்திருந்தனர்.