ஷா ஆலம், ஏப் 13- பள்ளிகளில் கோவிட்-19 நோய்ப் பரவல் தொடர்பில் அடுத்தக் கட்ட நடவடிக்கையை எடுப்பதற்கு முன்னர் மாநில அரசு ஒரு வார காலத்திற்கு தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொள்ளும்.
அந்நோய்த் தொற்றுக்கான காரணம் குறித்து ஆராயப்படும் வேளையில் அதன் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
பள்ளியைச் சம்பந்தப்படுத்திய நோய்ச் சம்பவம் இரு வாரங்களுக்கு முன்னன்ர கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து தங்கும் விடுதியுடன் கூடிய அந்த பள்ளியின் நிர்வாகம் மற்றும் சுகாதார அமைச்சை உட்படுத்திய சிறப்பு சந்திப்பு ஒன்றை நாங்கள் ஏற்பாடு செய்தோம் என்றார் அவர்.
ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி பள்ளியைத் திறக்கும் முடிவு குறித்து அந்த சந்திப்பில் விரிவாக விவாதிக்கப்பட்டது என்று அறிக்கை ஒன்றில் அவர் தெரிவித்தார்.
அந்த நோயின் கடுமையான தாக்கம் காரணமாக 30 முதல் 40 விழுக்காட்டு ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளதோடு மரணமும் நிகழ்ந்துள்ளது என அவர் குறிப்பிட்டார்.
வேலையிடங்களில் நோய்ப் பரவல் இன்னும் தீவிரமாக உள்ளதாகக் கூறிய அவர். சிப்பாங்கில் இரு வாரங்களுக்கு முன்னர் நோய் அதிகரித்துள்ள நிலையில் மற்ற பகுதிகளில் நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளது என்றார்.