மாராங், ஏப் 14- ஒவ்வோராண்டும் ரமலான் மாதத்தின் போதும் தென்னை மரத்திலிருந்து எடுக்கப்படும் நீரா கோலா பானத்திற்கு அதிக கிராக்கி ஏற்படுகிறது. இங்குள்ள கம்போங் பத்து பூத்தே கூட்டு நிலத் திட்ட பங்கேற்பாளர்கள் 100 பேர் இந்த பானத்தை எடுக்கும் பணியில் தீவிரமாக ஈடுபடுகின்றனர்.
துவாக் என்றும் அழைக்கப்படும் இந்த நீரா பானத்திற்கான தேவை திரங்கானு மக்கள் மத்தியில் கிட்டத்தட்ட ஐந்து மடங்கு அதிகரித்து விட்டதாக இந்த பானம் எடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ள இஸ்மாயில் சுலைமான் (வயது 60) கூறினார்.
நாளொன்றுக்கு சராசரி 40 லிட்டர் நீராக பானத்தை நான் விற்பனை செய்கிறேன். மக்கள் மத்தியில் இந்த பானத்திற்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கையிருப்பு குறைவாக உள்ள காரணத்தால் முன்கூட்டியே ஆர்டர் கொடுத்தவர்களுக்கு மட்டுமே முன்னுரிமைஅளிக்கிறேன் என்றார் அவர்.
பல சிறு வியாபாரிகள் என்னிடமிருந்து இந்த நீரா பானத்தை வாங்கி விற்பனை செய்ய விரும்புகின்றனர். 500 மில்லி லிட்டர் பானத்தை அவர்கள் 5 வெள்ளி முதல் 7 வெள்ளி வரையிலான விலையில் விற்கின்றனர் என்று அவர் மேலும் சொன்னார்.
கம்போங் பத்து பூத்தேவில் கிடைக்கும் நீரா பானம் தனித்துவம் வாய்ந்தாக விளங்குகிறது. ஆற்றோரம் உள்ள காரணத்தால் இங்குள்ள மண் கனிமவளம் நிறைந்ததாக உள்ளது என்றார் அவர்.
நீரா பானத்தின் விற்பனையை மேலும் அதிகரிப்பதற்கு ஏதுவாக கூட்டுறவு சங்கம் ஒன்றை அமைக்க இங்குள்ள நீரா பான உற்பத்தியாளர்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக டத்தாரான் பத்து பூத்தே தலைவர் நோர் அஸ்மான் ஹசான் கூறினார்.