NATIONALPress Statements

எஸ்.ஒ.பி. விதிகளை அலட்சியம் செய்தால் கோவிட்-19 எண்ணிக்கை தினசரி 10,000 ஆக உயரும்

ஷா ஆலம், மே 6– பொதுமக்கள்  எஸ்.ஒ.பி. விதிமுறைகளை கடைபிடிப்பதில்  அலட்சியம் காட்டினால்  நோன்புப் பெருநாளுக்குப் பின்னர் கோவிட்-19 நோய்த் தொற்றின் எண்ணிக்கை தினசரி 10,000 ஆக உயரும் அபாயம் உள்ளது

நாட்டில் நோய்த் தொற்றின் எண்ணிக்கை இந்தியாவைப் போல் அபரிமிதமாக உயர்வு காண்பதற்கான சாத்தியம் உள்ளதாக சுகாதார அமைச்சு கணித்துள்ளது என்று பாதுகாப்புக்கான முதன்மை அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கூறினார்.

தடுப்பு நடவடிக்கைகளை முறையாக மேற்கொள்ளாது போனாலும் எஸ்.ஒ.பி. விதிமுறைகளை பொதுமக்கள் கடைபிடிக்காவிட்டாலும் இந்நிலைமை உருவாகும் என அவர் சொன்னார்.

நாளொன்றுக்கு பத்தாயிரம் கோவிட்-19 சம்பவங்கள் பதிவானால்  இந்தியா போன்ற நிலை நமக்கு ஏற்பட்டு விடும். மக்கள்  கூட்டங் கூட்டமாக இறப்பதை காண நாம் விரும்பவில்லை என்றார் அவர்.

மக்களிடையே அதிருப்தியும் கோபமும் ஏற்பட்டாலும் மக்கள் உயிரைக் காப்பாற்றுவதற்கான சரியான நடவடிக்கையாக நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் அமலாக்கம் அமைகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

மக்களுக்கு கடுமையான விளைவுகள் ஏற்படும் அளவுக்கு  பொறுப்பற்ற அரசாங்கமாக இருக்க விரும்பவில்லை என்று செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார்.

இதனிடையே, நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை பிறப்பிக்கப்பட்ட ஆறு மாவட்டங்களில் உள்ள ரமலான் சந்தைகளை சிலாங்கூர் அரசு மூடுவதில் தங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்றும் இஸ்மாயில் சப்ரி சொன்னார்.

 


Pengarang :