ஷா ஆலம், மே 5– சிலாங்கூரில் உள்ள ஆறு மாவட்டங்களில் நடமாட்டக் கட்டுப்பட்டு ஆணை அமல் படுத்தப்பட்டதைத் தொடர்ந்து மாநிலத்திலுள்ள அனைத்து பள்ளிகளும் நாளை தொடங்கி மூடப்படுகின்றன.
சிலாங்கூர் இஸ்லாமிய சமய இலாகாவினால் நடத்தப்படும் பள்ளிகள் உள்பட மலேசிய கல்வியமைச்சின் கீழுள்ள அனைத்துப் பள்ளிகளும் மூடப்படுவதாக மாநில மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
மாநிலத்திலுள்ள அனைத்து பள்ளிகளும் நாளை தொடங்கி மூடப்படுகின்றன. தனியார் பள்ளிகளும் அவ்வாறு செய்யும் என எதிர்பார்க்கிறேன் என்று இங்கு நடைபெற்ற சிறப்பு செய்தியாளர் கூட்டத்தில் அவர் தெரிவித்தார்.
இதனிடையே, மாநிலத்திலுள்ள 938 பள்ளிகளையும் மூடும் நடவடிக்கை இரு தினங்களுக்கு முன்னதாகவே மேற்கொள்ளப்படுவதாக மாநில கல்வி இயக்குநர் இஸ்மி இஸ்மாயில் கூறினார்.
நோன்பு பெருநாளை முன்னிட்டு அனைத்துப் பள்ளிகளும் மே 8ஆம் தேதி மூடப்படுவதாக இருந்தது. எனினும், கோவிட்-19 நோய்த் தொற்று பரவல் காரணமாக இரு தினங்களுக்கு முன்னதாகவே அனைத்து பள்ளிகளையும் மூட முடிவெடுத்துள்ளோம் என்று அவர் சொன்னார்.