ஷா ஆலம், மே 7– ரமலான் மாதம் இறுதி வாரத்தை எட்டியுள்ள நிலையில் வர்த்தகர்கள் மற்றும் வருகையாளர்கள் எஸ்.ஒ.பி. விதிமுறைகளை முறையாக கடைபிடிப்பதை உறுதி செய்ய நோன்புப் பெருநாள் சந்தைகளில் கண்காணிப்பு நடவடிக்கையை ஊராட்சி மன்றங்கள் தீவிரப்படுத்தியுள்ளன.
தங்கள் பகுதியில் உள்ள ஆறு நோன்புப் பெருநாள் சந்தைகளில் காவல் துறையின் துணையுடன் தீவிர கண்காணிப்பு பணிகளை தாங்கள் மேற்கொண்டு வருவதாக ஷா ஆலம் மாநர் மன்றத்தின் பொது உறவுப் பிரிவுத் தலைவர் ஷாரின் அகமது கூறினார்.
தற்போது வரை நிலைமை கட்டுப்பாட்டில் இருந்த போதிலும் எஸ்.ஒ.பி. விதிமுறை மீறல்கள் நிகழாதிருப்பதை உறுதி செய்யும் நோக்கில் நோன்புப் பெருநாள் சந்தைகள் தொடர்ந்து கண்காணிப்பின் கீழ் வைக்கப்பட்டுள்ளதாக அவர் சொன்னார்.
விதிமுறைகளை மீறும் வணிகர்களுக்கு எதிராக அபராதம் விதிப்பது மற்றும் வர்த்தக அனுமதியை மீட்டுக் கொள்வது உள்பட கடுமையான நடவடிக்கைள் எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.
இதனிடையே, செலாயாங் மால் பேரங்காடியில் உள்ள 30 வணிகர்களை உள்ளடக்கிய நோன்புப் பெருநாள் சந்தையில் வலுவான கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக செலாயாங் நகராண்மைக் கழக சிறு வர்த்தகம் மற்றும் லைசென்ஸ் பிரிவு தலைவர் ஷரியா ஜாஹிட் கூறினார்.
நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காலத்தில் கடைபிடிக்க வேண்டிய எஸ்.ஒ.பி. நிபந்தனைகளை உட்படுத்திய விதிமுறைகள் குறித்து வணிர்களுக்கு வழங்கப்பட்ட லைசென்சில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.