ஷா ஆலம், மே 24- இஸ்ரேலின் கோரத் தாக்குதலில் கடுமையாக பாதிக்கப்பட்ட பாலஸ்தீன மக்களுக்கு உதவுவதற்காக சிலாங்கூர் மாநில அரசினால் உருவாக்கப்பட்ட பரிவு நிதித்திட்டத்திற்கு 2 லட்சத்து 23 ஆயிரத்து 957 வெள்ளி 77 காசு சேர்ந்துள்ளது.
பாலஸ்தீன மக்களுக்கு உதவும் நோக்கில் கடந்த 19ஆம் தேதி ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டத்திற்கு பத்து நாட்களில் பத்து லட்சம் வெள்ளியைத் திரட்ட தாங்கள் திட்டமிட்டுள்ளதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
இந்நிதிக்கு சிலாங்கூர் மந்திரி புசார் கழகத்தின் சார்பில் 107,930 வெள்ளியும் பி.கே.என்.எஸ். எனப்படும் சிலாங்கூர் மாநில மேம்பாட்டுக் கழகம் சார்பில் 67,000 வெள்ளியும் சிலாங்கூர் விவசாய மேம்பாட்டுக் கழகம் சார்பில் 21,250 வெள்ளியும் மலேசிய இஸ்லாம் வர்த்தக மன்ற சிலாங்கூர் கிளையின் மூலம் 10,000 வெள்ளியும் திரட்டப்பட்டுள்ளன.
இது தவிர எனது சொந்த நன்கொடையாக 10,000 வெள்ளியை வழங்கியுள்ளேன். தாமான் டெம்ப்ளர் சட்டமன்ற உறுப்பினர் தனது பங்காக 7,777.77 வெள்ளியை வழங்கியுள்ளார் என்று அமிருடின் கூறினார்.
மூன்றரை லட்சம் வெள்ளி மதிப்பில் சிலாங்கூர் ஏய்ட் அம்புலன்ஸ் வண்டி மற்றும் நான்கரை லட்சம் வெள்ளி மதிப்பில் சிலாங்கூர் ஏய்ட் டிராக் வண்டியை வாங்குவதற்காக இந்த நிதி மலேசிய உலக அமைதி அமைப்பிடம் வழங்கப்படும் என்றம் அவர் தெரிவித்தார்.
மேலும் ஒன்றரை லட்சம் வெள்ளி உணவுப் பொருள்கள் மற்றும் எண்ணைய் உள்ளிட்ட பொருள்களை வாங்குவதற்கு பயன்படுத்தப்படும் என்றார் அவர்.