பெட்டாலிங் ஜெயா, மே 12– கிளானா ஜெயாவிலுள்ள அடுக்குமாடி வீடொன்றில் ஒன்பது மாதக் குழந்தை கடந்த ஏப்ரல் மாதம் 27ஆம் தேதி இறந்ததற்கு பாலியல் துன்புறுத்தலே காரணம் என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அக்குழந்தையின் பராமரிப்பாளரின் 36 வயது கணவனே அந்த அடாதச் செயலை புரிந்தவன் என்று கண்டறியப்பட்டுள்ளதாக பெட்டாலிங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முகமது பக்ருடின் அப்துல் ஹமிட் கூறினார்.
போதைப் பித்தன் எனநம்பப்படும் அந்த ஆடவன் அக்குழந்தையின் வாயை பொத்தியதால் மூச்சு திணறி அக்குழந்தை உயிரிழந்துள்ளது. மேலும் அக்குழந்தையின் ஆசனவாயிலும் காயங்கள் காணப்பட்டன என்றார் அவர்.
அந்த குழந்தை பராமரிப்பாளர் வீட்டு வேலைகளைச் செய்து கொண்டிருந்த போது கணவன் அக்குழந்தையுடன் பூட்டிய அறையில் இரண்டு மணி நேரத்திற்கும் மேல் செலவிட்டுள்ளான். அப்பெண் அறையில் சென்று சோதனையிட்ட போது அக்குழந்தை சுயநினைவின்றி காணப்பட்டது என்று அவர் மேலும் சொன்னார்.
மருத்துவர்களிடமிருந்து மருத்துவ அறிக்கை கிடைக்கப் பெற்றதைத் தொடர்ந்து 36 வயதுடைய அத்தம்பதியரை போலீசார் கடந்த மாதம் 29ஆம் தேதி கைது செய்தனர் எனக்கூறி அவர், கைதான போது அவர்கள் ஷாபு வகை போதைப் பொருளை பயன்படுத்தியிருந்தது கண்டு பிடிக்கப்பட்டது என்றார்.
மரணம் விளைவித்த காரணத்திற்காக குற்றவியல் சட்டத்தின் 302வது பிரிவு மற்றும் குற்றவியல் சட்டத்தின் 377சி பிரிவின் கீழ் அந்த ஆடவன் தடுத்து வைக்கப்பட்டுள்ள வேளையில் அவனது மனைவி 1952fஆம் ஆண்டு அபாயகர போதைப் பொருள் 15(1)(ஏ) பிரிவின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறார்.