காஜாங், மே 8– இன்று இங்கு நடைபெற்ற இலவச கோவி-19 பரிசோதனை இயக்கத்தில் 811 பேர் பங்கு கொண்டனர். அந்த பெருந்தொற்றைத் தடுப்பதில் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு அதிகரித்து வருவதை இது காட்டுகிறது.
இதற்கு முன்னர் இதே மாவட்டத்தில் நடத்தப்பட்ட இத்தகைய சோதனைகளில் 300 பேர் மட்டுமே கலந்து கொண்டதுடன் ஒப்பிடுக்கையில் இது இரு மடங்கு அதிகமாகும் என்று கிளிளிக் செல்கேர் நிர்வாகி முகமது நோர் முகமது நாசீர் கூறினார்.
முன்கூட்டியே பதிவு செய்தவர்களை மட்டும் இந்த எண்ணிக்கை உள்ளடக்கியுள்ளது. நேரடியாக பரிசோதனை மையத்திற்கு வந்தவர்கள் இந்த கணக்கில் சேர்க்கப்படவில்லை என்று அவர் சொன்னார்.
பி.கே.பி. 3.0 அமலாக்க காலத்தில் இத்தகைய இலவச பரிசோதனை இயக்கங்களில் பங்கேற்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நோன்பு பெருநாள் நெருங்கி வரும் நிலையில் பொதுமக்களிடையே இந்நோய் தொடர்பான விழிப்புணர்வு அதிகரித்துள்ளதை இது காட்டுகிறது என்றார் அவர்.
இதுபோன்ற சோதனைகளை மேற்கொள்ளும்போது நமது உடல் நிலை குறித்து அறிந்து கொள்ள முடியும். இதன் மூலம் நமது பாதுகாப்பு உறுதி செய்யும் அதேவேளையில் நோய்ப் பரவலையும் கட்டுப்படுத்த முடியும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
ஒரு சோதனை மையத்தில் 500 பேர் மீது மட்டுமே சோதனை மேற்கொள்ள இலக்கு வகுத்துள்ள போதிலும் அவசியம் ஏற்படும் பட்சத்தில் 1,500 பேருக்குகூட சோதனை மேற்கொள்ளும் ஆற்றலை தாங்கள் கொண்டுள்ளதாக முகமது நோர் மேலும் குறிப்பிட்டார்.