கோலாலம்பூர், மே 8– ஆகாய மார்க்கமாக மாநில எல்லைகளைக் கடப்பதற்க 583 பேர் செய்து கொண்ட விண்ணப்பத்தை போலீசார் நிராகரித்துள்ளனர்.
கடந்த ஏப்ரல் மாதம் 30ஆம் தேதி முதல் நேற்று வரை சுபாங், சுல்தான் அப்துல் அஜிஸ் ஷா விமான நிலையத்தில் இந்த விண்ணப்பங்கள் செய்யப்பட்டதாக பெட்டாலிங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முகமது பக்ருடின் அப்துல் ஹமிட் கூறினார்.
எல்லை கடப்பதற்கு நியாயமான காரணங்களை கொடுக்காதது, செல்லுபடியாகாத அல்லது முழுமை பெறாத ஆவணங்களை சமர்ப்பித்தது ஆகிய காரணங்களால் அந்த விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதாக அவர் சொன்னார்.
நெருங்கிய குடும்ப உறவினர்களின் மரணம், அவசர தேவை மற்றும் வேறு மாநிலங்களில் உள்ள கணவர் அல்லது மனைவியைச் சந்திப்பது ஆகிய காரணங்களுக்காக மட்டுமே அனுமதி வழங்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
வெளி மாநிலங்களுக்குச் செல்வதற்கான அனுமதியை போலீசாரிடமிருந்து பெற்றப் பின்னரே விமான டிக்கெட்டுகளை வாங்க வேண்டும் என்றும் பொது மக்களுக்கு அவர் அறிவுரை கூறினார்.
தங்கள் வசம் உள்ள விமான டிக்கெட்டை மாநில எல்லைகளைக் கடப்பதற்கான வலுவான ஆதாரமாக காட்டக் கூடாது என்றும் நினைவுறுத்தினார்.