ஷா ஆலம், ஜூன் 12– சிலாங்கூர் அரசின் ஏற்பாட்டில் மாநிலத்திலுள்ள அனைத்து 56 சட்டமன்றத் தொகுதிகளிலும் மேற்கொள்ளப்பட்ட இலவச கோவிட்-19 பரிசோதனை இயக்கம் முடிவுக்கு வந்துள்ள நிலையில் அவ்வியக்கத்தில் 97,565 பேர் பங்கேற்று பயனடைந்துள்ளனர்.
பரிசோதனையில் பங்கேற்றவர்களில் நூற்றுக்கு நால்வர் என்ற அடிப்படையில் அதாவது 3,342 பேர் நோய்த் தொற்றுக்கான அறிகுறியைக் கொண்டிருந்ததாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
இந்த பரிசோதனை இயக்கத்தில் பங்கேற்ற சிலாங்கூர் மக்களுக்கும் இவ்வியக்கம் வெற்றிகரமாக நடைபெறுவதற்கு பெரும் பாடுபட்ட பணியாளர்களுக்கும் தாம் நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையை தொடர்ந்து கடைபிடிக்கும் அதே வேளையில் சுய தனிமைப்படுத்துதலையும் கடைபிடிக்கும்படி அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.இதன் வழி கோவிட்-19 நோய்த் தொற்றிலிருந்து நாம் விடுபட முடியும் என அவர் சொன்னார்.
அதிக நோய்த் தொற்று சம்பவங்கள் பதிவான பகுதிகள், தொழிற்சாலைகள், தொழில்துறை பகுதிகளை இலக்காக கொண்டு மூன்றாம் கட்ட பரிசோதனை இயக்கம் நடத்தப்படும் எனக் கூறிய அவர், இவ்வியக்கத்தின் போது ஒரு லட்சம் பேரை பரிசோதிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகச் சொன்னார்.