சபாக் பெர்ணம், ஜூன் 9– இதுவரை மாநிலத்திலுள்ள 52 சட்டமன்றத் தொகுதிகளில் இதுவரை நடத்தப்பட்ட இலவச கோவிட்-19 பரிசோதனை இயக்கத்தில் 95,561 பேர் பங்கேற்றுள்ளனர்.
பரிசோதனையில் பங்கு கொண்டவர்களில் 96.52 விழுக்காட்டினர் அதாவது 92,231 பேர் நோய்த் தொற்றிலிருந்து விடுபட்டிருந்த வேளையில் 3,330 பேர் அல்லது 3.48 விழுக்காட்டினர் நோய்த் தொற்றுக்கான அறிகுறியைக் கொண்டிருந்ததாக கிளினிக் செல்கேர் நிர்வாகி முகமது நோர் முகமது நாசீர் கூறினார்.
இத்தகைய பரிசோதனை இயக்கங்களில் 20 முதல் 40 வயது வரையிலானவர்களே அதிகம் பங்கு கொண்டனர். நோய்த் தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்கு ஏதுவாக இந்த பரிசோதனையை மேற்கொள்வதன் அவசியத்தை அவர்கள் உணர்ந்திருந்தனர் என்றார் அவர்.
இங்குள்ள டேவான் துன் ரசாக்கில் நடைபெற்ற சுங்கை பாஞ்சாங் தொகுதி நிலையிலான இலவச பரிசோதனை இயக்கத்தின் போது அவர் இதனைத் தெரிவித்தார்.