கோலாலம்பூர், ஜன.13-
கல்வித் தகுதிக்கேற்ற வேலையைப் பெறுவதில் பட்டதாரிகள் எதிர்நோக்கும் சிக்கல்களே இளைஞர்கள் மத்தியில் அதிகம் விவாதிக்கப்படும் விவகாரமாகும்.
முதலாளிகள் தரப்பில், பட்டதாரிகளில் பெரும்பாலோரிடம் சம்பந்தப்பட்ட தொழில் குறித்து ஆற்றலும் திறனும் இல்லை என்று கூறப்படுகிறது. பட்டதாரிகளோ இளங்கலை பட்டப்படிப்பு அல்லது பட்டயக் கல்விக்காக மூன்று முதல் ஐந்தாண்டுகள் செலவழித்துள்ளனர்.
இது குறித்து பலர் கருத்துரைக்கையில் உயர்க்கல்வி கழகங்களில் பல, நாட்டின் தொழில்துறையின் தேவைக்கு ஏற்ற துறைகளில் பயிற்சி வழங்குவதில்லை என்ற குற்றஞ்சாட்டுகின்றனர்.
பட்டதாரி மாணவர்களில் பலர் தாங்கள் பயிற்சி பெற்ற துறையைத் தவிர்த்து பிற துறைகளில் பணியாற்றுவதைக் காண முடிவதாக மலேசிய முதலாளிகள் சம்மேளனத்தின் தலைவர் டத்தோ சம்சுடின் பர்டன் கூறுகிறார்.
இதற்கு காரணம், புதுப் புது துறைகளுக்கான பயிற்சிகளை தங்கள் பாடத்திட்டங்களுள் புகுத்த பல்கலைக்கழகங்களால் இயலவில்லை என்றும் அவர் சொன்னார்.
“ஒரு புதிய துறைக்கான பயிற்சியை வழங்க பல்கலைக் கழகங்களுக்கு நீண்ட காலம் தேவைப்படுகிறது” என்றார்.
புதிய துறைக்கான பயிற்சியை வழங்குவதற்கு நீண்ட காலம் தேவைப்படுவதால், சம்பந்தப்பட்ட துறைக்கான பயிற்சிகள் நடைபெறும் காலக் கட்டத்தில் அந்தத் துறையில் பல்வேறு மாற்றங்களும் நிகழ வாய்ப்புண்டு என்று அவர் சுட்டிக் காட்டினார்.
எனவே, வேலைக்கானச் சந்தையில் மாற்றங்கள் அதிகளவில் ஏற்படுவதால், பட்டதாரிகளின் படிப்பிற்கு ஏற்புடையவையாக அத்தொழில்கள் இருப்பதில்லை என்று அவர் விவரித்தார்.