கோலாலம்பூர், மார்ச் 17-
நாட்டில் கோவிட்-19 பரவலைத் தடுக்க மார்ச் 18ஆம் தேதி தொடங்கி மார்ச் 31ஆம் தேதி வரையில் மொத்தம் 14 நாட்களுக்கு மக்கள் நடமாட்ட கட்டுபாடு உத்தரவை பிறப்பித்துள்ள அரசாங்கத்தின் முடிவு ஒரு சரியான நடவடிக்கை என்று அரசியல் அறிவியல் நிபுணர் ஒருவர் கருத்துரைத்தார்.
“அரசாங்கம் விதித்துள்ள தடைகளையும் வழிகாட்டுதல்களையும் பொது மக்கள் பின்பற்றுவதன் வழி இந்தத் தொற்று பரவலைத் தடுக்க தங்களது பங்களிப்பை ஆற்ற வேண்டுய தருணம் இது” என்று பேராசிரியர் டத்தோ டாக்டர் நசாருடின் முகமது வலியுறுத்தினார்.
இந்த இடைக்கால நடமாட்ட கட்டுபாடு உத்தரவானது பொது மக்களின் நடமாட்டத்தை கட்டுபடுத்துவதன் மூலம் கோவிட்-19 பரவல் மேலும் மோசமடைவதில் இருந்து தடுக்க முடியும் என்பதை மக்கள் உணர வேண்டும் என்றார் அவர்.
“இதனிடையே இந்த கட்டுபாடு குறித்து மக்கள் பீதி அடையாமல் விதிக்கப்பட்டுள்ள உத்தரவுகளை அமைதியாக பின்பற்ற வேண்டும். இது ஓர் ஊரடங்கு உத்தரவு அல்ல. மாறாக, நடமாட்ட கட்டுபாடு மட்டுமே” என்று அவர் விவரித்தார். இச்சமயத்தில் மக்கள் அமைதியாக வீட்டில் நேரத்தை செலிவிடுவதோடு வெளி நடமாட்டத்தை குறைத்து கொண்டால் போதுமானது என்றார் அவர்.